கோவை: காரில் தவறவிட்ட வெளிநாட்டு டாலர் பணத்தை கண்டெடுத்த கோவை டிரைவர், நேர்மையாக உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
கோவை மாவட்டம் அரசூர் முதலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தன் (42). கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று கோவை-திருச்சி ரோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து 3 வெளிநாட்டவர்களை தனது காரில் ஏற்றிக்கொண்டு ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து சென்றார்.
அங்கு வெளிநாட்டவர்களை இறக்கிவிட்ட ஜீவானந்தன், பின்னர் அடுத்த சவாரிக்காக காரை எடுத்துச் சென்றார். சிறிது நேரத்தில் காரின் பின்பக்க இருக்கையை கவனித்தபோது, அங்கு ஒரு கவர் கிடந்ததை பார்த்தார்.
Also Read: சித்தாபுதூரில் தனியார் பாரை மூடக்கோரி இரவு திடீர் போராட்டம் – பொதுமக்கள் ஆவேசம்!
அந்த கவரை எடுத்து பார்த்தபோது, அதற்குள் வெளிநாட்டு டாலர் பணம் இருப்பது தெரியவந்தது. காரில் பயணம் செய்த வெளிநாட்டவர்கள் அவசரத்தில் பணத்தை தவறவிட்டு சென்றிருக்கலாம் என ஜீவானந்தன் கருதினார்.
இதையடுத்து பணத்தை தன்னிடம் வைத்துக்கொள்ளாமல், உடனடியாக வெளிநாட்டவர்களை இறக்கிவிட்ட ரேஸ்கோர்ஸ் நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார். அங்கு ஓட்டல் ஊழியர்களிடம் நடந்த சம்பவத்தை எடுத்துக்கூறி, காரில் கிடைத்த கவரை அவர்களிடம் காண்பித்தார்.
இதையடுத்து ஓட்டல் ஊழியர்கள், அங்கு தங்கியிருந்த வெளிநாட்டவர்களை தொடர்புகொண்டு அழைத்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, காரில் தங்களது பணம் தவறவிட்டது தெரியவந்தது.
தொடர்ந்து ஜீவானந்தன் அந்த கவரில் இருந்த வெளிநாட்டு பணத்தை உரியவர்களிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தார். தங்களது பணத்தை நேர்மையாக திருப்பி ஒப்படைத்த ஜீவானந்தனுக்கு வெளிநாட்டவர்கள் நன்றி தெரிவித்தனர்.
மேலும், அவரது நேர்மையையும் மனிதநேயத்தையும் ஓட்டல் ஊழியர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் பாராட்டினர். காரில் கிடைத்த பணத்தை உரியவர்களிடம் ஒப்படைத்த டிரைவரின் செயல் கோவையில் கவனம் பெற்றுள்ளது.





