கோவை: கோவை துடியலூர் அருகே கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை, வீட்டின் காம்பவுண்ட் இரும்பு கதவை உடைத்து உள்ளே நுழைய முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கதவை உடைத்து வீட்டிற்குள் நுழைய முயற்சி:
கோவை துடியலூர் அருகே உள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவது தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை ஒன்று கதிர் நாயக்கன்பாளையம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. அங்கு ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவரில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு கதவை தனது தும்பிக்கையால் தள்ளி உடைத்து, வீட்டின் வளாகத்திற்குள் நுழைய முயன்றதாக கூறப்படுகிறது.

பின்னர், வீட்டின் அருகே இருந்த வாழை மரத்தை பிடுங்கி சேதப்படுத்திய யானை, அதன் இலைகளை சாப்பிட்டது. இதனிடையே, சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர்கள் விழித்துக் கொண்டதை அறிந்த யானை, அங்கிருந்து மெதுவாக நகர்ந்து சென்றது.
சி.சி.டி.வி.யில் பதிவான காட்சி:
யானை காம்பவுண்ட் கதவை உடைத்து வீட்டிற்குள் நுழைய முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. யானை குடியிருப்பு பகுதியில் நடமாடிய காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளன.
இந்த காட்சிகளை அப்பகுதி மக்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் நிலையில், இரவு நேரங்களில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லும்போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், குடியிருப்பு பகுதிக்குள் தொடர்ந்து காட்டு யானைகள் வருவதைத் தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த யானையை பாதுகாப்பாக அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.





