கோவை: கோவை உக்கடத்தில், 7 ரூபாய் டிக்கெட்டுக்கு 10 ரூபாய் வசூலித்ததாக கூறி தனியார் பேருந்து நடத்துநரிடம் பெண் பயணி ஒருவர் கேள்வி எழுப்பி, பேருந்தை நடுரோட்டில் மறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காந்திபுரத்தில் இருந்து உக்கடம் வழியாக அண்ணா சிலை உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமான அரசு மற்றும் தனியார் நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், உக்கடத்தில் இருந்து அண்ணா சிலை பேருந்து நிறுத்தத்திற்கு செல்வதற்காக பெண் ஒருவர் தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.
அப்போது, 7 ரூபாய் கட்டணத்திற்குப் பதிலாக நடத்துநர் 10 ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண், கூடுதலாக 3 ரூபாய் ஏன் வசூலிக்கப்படுகிறது எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு நடத்துநர் முறையாக பதிலளிக்காமல், “நான் இப்படித்தான் வாங்குவேன். இஷ்டம் இருந்தால் ஏறு, இல்லையென்றால் இறங்கிப் போ. வேண்டுமென்றால் RTO-விடம் புகார் கொடு” எனக் கூறியதாக தெரிகிறது.
video
இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண் பேருந்தில் இருந்து இறங்கி, நடுரோட்டில் பேருந்தை மறித்து நடத்துநரிடம் நியாயம் கேட்டுள்ளார். இதையடுத்து அப்பகுதியில் பொதுமக்களும் சக பயணிகளும் திரண்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் அந்த பெண்ணை மிரட்டுவது போல் சைகை செய்தும் , முறைத்து செல்லும் நடத்துநரின் நடவெடிக்கைகளை வீடியோவில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தனியார் பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பதாகவும், இதுகுறித்து கேள்வி எழுப்பும் பயணிகளிடம் சில நடத்துநர்கள் முறையாக நடந்து கொள்வதில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் உரிய விசாரணை நடத்தி, விதிமீறல் இருந்தால் சம்பந்தப்பட்ட பேருந்து மற்றும் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





