கோவை : கோவை மாவட்டம் சூலூர் அருகே பாப்பம்பட்டி பகுதியில் வாலிபர் ஒருவர் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு, தகரக் கொட்டகையில் சடலமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பாப்பம்பட்டி அருகே நந்தினி நகர் என்ற பகுதி உள்ளது. நீண்ட நாட்களுக்கு முன்பு வீட்டுமனைகளாகப் பிரிக்கப்பட்ட இந்தப் பகுதியில் இதுவரை கட்டிடங்கள் எதுவும் கட்டப்படாமல், தற்போது அடர்ந்த முள் காடாக காணப்படுகிறது.
இந்தப் பகுதியில் சிங்காநல்லூரைச் சேர்ந்த குருநாதன் என்பவர் புதிதாக தகரக் கொட்டகை அமைக்கும் பணியை தொடங்கியுள்ளார். கட்டுமானப் பணிகள் ஆரம்பகட்டத்தில் உள்ள நிலையில், அவர் வழக்கமாக வாரத்திற்கு ஒருமுறை தனது இடத்துக்கு வந்து பார்வையிட்டு செல்வதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை தனது இடத்தை பார்வையிடுவதற்காக குருநாதன் வந்துள்ளார். அப்போது, அங்கு புதிதாக அமைக்கப்பட்டு வரும் தகரக் கொட்டகைக்குள் வாலிபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில், நிர்வாணமாக சடலமாக கிடப்பதை பார்த்துள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குருநாதன் உடனடியாக சூலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சூலூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட வாலிபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், எதற்காக நந்தினி நகர் பகுதிக்கு வந்தார், அவரை கொலை செய்தது யார் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
ஆள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த முள் காட்டுப் பகுதியில், புதிதாக கட்டப்பட்டு வரும் தகரக் கொட்டகைக்குள் வாலிபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்து வரும் போலீசார், வாலிபரின் அடையாளத்தை கண்டறியும் பணியிலும், கொலைக்கான காரணம் மற்றும் குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணையிலும் ஈடுபட்டுள்ளனர்.





