நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி பகுதியில், ஆட்கொல்லிப் புலியைப் பிடிப்பதற்காக வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் சிறுத்தை சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூடலூர் அடுத்துள்ள ஓவேலி பாரம் பகுதியில் கடந்த சில நாட்களாக ஆட்கொல்லிப் புலியின் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், அந்தப் புலி இரண்டு பேரை கொன்றதாக கூறப்படும் நிலையில், அதனைப் பிடிப்பதற்காக வனத்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, புலியின் நடமாட்டம் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டதுடன், புலியைப் பிடிப்பதற்காக கூண்டுகளும் வைக்கப்பட்டுள்ளன. அந்த கூண்டுக்குள் புலியை ஈர்ப்பதற்காக பச்சை இறைச்சி இரையாக வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கூண்டை நோக்கி வந்த சிறுத்தை ஒன்று எதிர்பாராத விதமாக அதற்குள் சிக்கியது. இதனை பார்த்த வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று கூண்டை சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, சிறுத்தையை பாதுகாப்பாக கூண்டில் இருந்து மீட்ட வனத்துறையினர், அதனை வாகனம் மூலம் அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர். பின்னர், வனப்பகுதிக்குள் சிறுத்தையை பாதுகாப்பாக விடுவித்தனர்.
பரபரப்பு
புலியைப் பிடிக்க வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தை சிக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே ஆட்கொல்லிப் புலியின் நடமாட்டத்தால் அச்சத்தில் உள்ள ஓவேலி பாரம் பகுதி மக்கள், தற்போது சிறுத்தையும் கூண்டில் சிக்கிய சம்பவத்தால் வனப்பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஆட்கொல்லிப் புலியை விரைந்து பிடித்து, பொதுமக்களின் அச்சத்தை போக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, புலியின் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.





