கோவை: பெற்றோருக்கு தன் மீது பாசம் இல்லை என நினைத்து 10ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை பாப்பநாயக்கன் பாளையம் மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். அவரது மூத்த மகள் ஷாக்சித்தியா (15). இவர் 10ம் வகுப்பு தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். இந்த நிலையில் ஷாக்சித்தியா தனது பெற்றோர் தங்கைக்கு முக்கியத்துவம் தருவதாகவும், தன் மீது பாசம் இல்லை என்றும் நினைத்து மனவேதனை அடைந்து வந்தார்.
நேற்று மதியம் சுரேஷ்குமார் வேலையை முடித்து வீட்டிற்கு வந்தார். அப்போது ஷாக்சித்தியா அறையில் தனியாக அமர்ந்திருந்ததை அவர் பார்த்தார். உடனே அவர், ஷாக்சித்தியாவிடம் சென்று விசாரித்த போது தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். அவரிடம், சுரேஷ்குமார் அது போன்று இல்லை என சமாதானம் செய்துள்ளார். பின்னர் இரவு அனைவரும் தூங்க சென்றனர். அதிகாலை சுரேஷ்குமார் எழுந்த போது ஷாக்சித்தியாவின் அறை பூட்டி இருப்பதை பார்த்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த சுரேஷ்குமார் வெகு நேரமாக கதவை தட்டினார். அவர் கதவை திறக்காததால் சுரேஷ்குமார் கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு ஷாக்சித்தியா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை இறக்கி ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். ஆம்புலன்சில் வந்த மருத்துவ உதவியாளர்கள் அவரை பரிசோதனை செய்து அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சிறுமியின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.