கோவையில் மாஜி போலீஸ்காரரை தாக்கிய தந்தை, மகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது…
கோவை சிவானந்தா காலனியை சேர்ந்தவர் மணி(63). ஓய்வு பெற்ற போலீஸ்காரர். இவரது தாயார் மணியக்காரம்பாளையம் இளங்கோவன் நகரில் வசிக்கும் மற்றொரு மகன் நடராஜன் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், உடல் நல பாதிப்பு ஏற்பட்டு அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
அவரை பார்க்க மணி சம்பவத்தன்று தனது சகோதரர் வீட்டுக்கு சென்றார். அப்போது, அங்கிருந்த நடராஜனுக்கும், மணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நடராஜன் மற்றும் அவரது மகள் ரஞ்சனி ஆகியோர் மணியை தாக்கினர். சப்பாத்தி கட்டையால் தாக்கியதில் கை உள்ளிட்ட இடங்களில் மணிக்கு காயம் ஏற்பட்டது.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின்பேரில், சரவணம்பட்டி போலீசார் நடராஜன், ரஞ்சனி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.