கோவை:யூ-டியூப் சேனலில் அவதூறாக பேசுவதாக, நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Advertisement

கோவையை சேர்ந்த வழக்கறிஞர்கள் பிரவீன் மற்றும் பிரியங்கா ஆகியோர் பொதுமக்களுடன் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
நடிகர் பயில்வான் ரங்கநாதன் யூ-டியூப் சேனல் மற்றும் சமூக ஊடகங்களில் அநாகரிகமான வார்த்தைகள், பெண்களை அவமதிக்கும் வகையிலான கருத்துகள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட விவரங்களை வெளியிட்டு வருகிறார்.
எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் பார்வையாளர்களை அதிகரிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தை அடிப்படையாக கொண்டு, தனி மனிதர் மற்றும் சமுதாயத்தில் பிரபலமாக இருக்கும் நபர்களை இழிவுபடுத்தும் வகையிலான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
இதனால் சமூக சீரழிவு ஏற்படும் நிலை உள்ளது. எனவே இத்தகைய வீடியோக்களை வெளியிடும் மற்றும் பரப்பும் ஊடகங்கள், சமூக வலைதலங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பயில்வான் ரங்கநாதன் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.