கோவை: வால்பாறையில் 7 வயது சிறுமியை சிறுத்தை கொன்ற சோகம் மறைவதற்குள் அடுத்த துயரம் அரங்கேறியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த பச்சமலை எஸ்டேட்டில், கடந்த ஜூன் மாதம் தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை சிறுத்தை கவ்விச்சென்றது.
சிறுமியின் தாய் கண்முன்னேயே இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், நீண்ட தேடுதலுக்குப் பிறகு புதருக்குள் இருந்து சிறுமியின் உடல் எடுக்கப்பட்டது.
தொடர்ந்து, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தை அகப்பட்டது. அதனை வனத்துறையினர் டாப் ஸ்லிப் அடர் வனத்திற்குள் விடுவித்தனர். அந்த சோகம் மறைவதற்குள் மீண்டும் ஒரு துயரம் அரங்கேறியுள்ளது.
சிறுத்தை தாக்குதல்
வால்பாறை பெவர்லி பகுதியில் தங்கி பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளர்களின் 8 வயது மகன் நூர் இஸ்லாம். சிறுவன் இன்று தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த சிறுத்தை ஒன்று சிறுவனைக் கவ்விச்சென்றது. இதனையறிந்து கதறிய சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அங்கு வந்த வனத்துறையினர் சிறுவனைத் தேடினர். அப்போது வீட்டின் அருகே உள்ள புதருக்குள் சிறுவன் சடலமாக கிடந்தார். உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
வால்பாறையில் அடுத்தடுத்து நடைபெறும் சிறுத்தை தாக்குதல்களால் அங்கு வசிக்கும் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். வனத்துறையினர் சிறுத்தையை உடனடியாக பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.