கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே வீட்டில் சுமார் 6 அடி உயர கஞ்சா செடியை வளர்த்து வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வடமாநிலத் தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டத்தில் போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலைத் தடுக்கும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி உத்தரவின்பேரில், மாவட்ட எல்லைப் பகுதிகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் வாகனங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கஞ்சம்பட்டி பகுதியில் போலீசார் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, அப்பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் பணியாற்றி வந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த அல்மோ கீர் மோலா என்பவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் தனது சொந்த ஊரான மேற்கு வங்கத்தில் இருந்து கஞ்சா விதைகளை கொண்டு வந்து, தான் தங்கியிருந்த வீட்டின் அருகே கஞ்சா செடியை வளர்த்து வந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Also Read: காய்ச்சலுக்காக மருத்துவமனை சென்ற குழந்தைக்கு HIV பாதிப்பு! கோவையில் சோகம்…
இதையடுத்து, அல்மோ கீர் மோலா தங்கியிருந்த காசிப்பட்டணம் பகுதிக்கு சென்ற போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது சுமார் 6 அடி உயரத்தில் வளர்ந்திருந்த கஞ்சா செடியை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அல்மோ கீர் மோலாவை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை சிறையில் அடைத்தனர்.





