கோவை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புலியகுளம் முந்தி விநாயகருக்கு நான்கு டன் மலர்களால் ராஜ அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையானது இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் கோவில்களில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி கோவை புலியகுளம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற முந்தி விநாயகர் கோவிலில் விநாயகருக்கு 4 டன் மலர் மாலைகளால் சந்தன காப்புடன் ராஜ அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்திக்கு முக்கிய மலர்களான செவ்வந்தி, ரோஜா, அருகம்புல் ஆகிய பூ மாலைகளை விநாயகருக்கு அலங்காரமாக அணிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை முதலே பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கோவில் நிர்வாகம் தரப்பிலும் பக்தர்கள் வரிசையாக நின்று வழிபடும் வகையில் தடுப்புகளானது அமைக்கப்பட்டுள்ளது மேலும் இப்பகுதியில் போக்குவரத்து காவல்துறையினரும் போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர்.

ஆசியாவிலேயே உயரமான ஒரே கல்லால் ஆன விநாயகர் சிலை உள்ள கோவில் இதுவாகும். இங்குள்ள விநாயகர் சிலையின் உயரம் 19 அடி, 190 டன் ஆகும்.