கோவை: கோவையில் வீட்டின் அருகே பொது ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து
பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை சுப்பிரமணியம்பாளையத்தில் குடியிருப்பு பகுதியில் வீட்டின் அருகே பொது ஆழ்துளை கிணறு அமைக்க குடியிருப்புவாசிகளின் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் எதிர்ப்பையும் மீறி மாநகராட்சி அதிகாரி போர்வெல் இயந்திரத்தை கொண்டுவந்து முயற்சி மேற்கொண்டு வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட துடியலூர் அருகே உள்ள சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் திருப்பதி நகர் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கோவை மாநகராட்சியின் 15 வது வார்டுக்கு உட்பட்ட இந்த பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போர்வெல் குழாய் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக திருப்பதி நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தப்பட்ட நிலையில் அங்கு வசித்து வரும் ஐஸ்வர்யா ரவிச்சந்திரன் என்பவரது வீட்டிற்கு மூன்று அடிக்கும் குறைவான இடத்தில் போர்வெல் அமைக்க அதிகாரிகள் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்ததை அடுத்து, இந்த தகவல் ஐஸ்வர்யாவுக்கு தெரிய வந்துள்ளது.
தங்கள் வீட்டின் அருகில் போர்வெல் குழாய் அமைத்தால் அது தங்கள் வீட்டு கட்டிடத்திற்கு சேதம் ஏற்படுத்தலாம் என்பதால் அருகில் உள்ள பொது இடத்தில் அமைக்க முடியுமா என ஆய்வு நடத்த வேண்டும் என அதிகாரிகளிடம் ஐஸ்வர்யா கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் மாநகராட்சி துணை பொறியாளரான திருமூர்த்தி என்பவர், அதே இடத்தில் தான் ஆழ்துளை கிணறு அமைக்கப்படும் என உறுதியாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக முதலமைச்சரின் தனிப்பிரிவு உட்பட பல்வேறு அதிகாரிகளுக்கும் மனு அளித்துள்ள ஐஸ்வர்யா, குறிப்பிட்ட இடத்தில் தான் போர்வெல் குழாய் அமைக்க முடியுமா? என்பது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளின் தகவல்கள் குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரிக்கை மனுவும் அளித்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை சம்பவ இடத்திற்கு நேரில் வந்த அதிகாரிகள், போர்வெல் இயந்திரத்தை கொண்டுவந்து மீண்டும் ஐஸ்வர்யாவின் வீட்டின் அருகிலேயே ஆழ்துளை கிணறு அமைக்கப்படும் என கூறியதோடு, பாதுகாப்பிற்காக போலீசாரையும் அழைத்து வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐஸ்வர்யா, தங்கள் பகுதிக்கு குடிநீர் வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட உள்ள இந்த ஆழ்துளை கிணறு மிக அவசியமானது என்பதில் தங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை என தெரிவித்தார்.
ஆனால் பல்வேறு இடங்கள் கண்டறியப்பட்ட போதும் துணை பொறியாளர் திருமூர்த்தி என்பவர் தங்களது வீட்டின் அருகில் தான் ஆழ்துளை கிணறு அமைக்கப்படும் என உறுதியாக தெரிவிப்பதோடு, எந்த உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தாலும், அந்த மனு தன்னிடம் தான் பரிசீலனைக்கு வரும் எனவும் கூறுவதாக குற்றம்சாட்டினார்.
வீட்டிற்கு சேதம் ஏற்படாத வகையில் மாற்று இடத்தில் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உரிய மேல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஐஸ்வர்யா மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த துடியலூர் காவல் ஆய்வாளர் விவேகனந்தன் இரு தரப்பினரை வைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதாக உறுதியளித்தார்.


