கோவை, மதுரை மக்களின் மெட்ரோ திட்டம் ரத்தா?

கோவை: கோவை மற்றும் மதுரையில் போதிய மக்கள் தொகை இல்லை என்று கூறி, மெட்ரோ ரயில் திட்டத்திற்கான அனுமதியை மத்திய அரசு மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

மதுரை மற்றும் கோவைக்கு மெட்ரோ ரெயில் அமைக்க தமிழக அரசு அனுப்பியிருந்த முன்மொழிவுகளை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

கடந்த2017ஆம் ஆண்டின் மெட்ரோ ரெயில் கொள்கையில் குறிப்பிடப்பட்ட படி, மக்கள் தொகை விதியே காரணம் என மத்திய வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் கூறியுள்ளது.

அந்த கொள்கையின் படி, ஒரு நகரில் 20 லட்சத்த்திற்கு மேற்பட்ட மக்கள் இருந்தால்தான் மெட்ரோ திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படும்.

ஆனால், கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கோவை மாநகராட்சியில் 15.84 லட்சம் மக்களும், மதுரை மாநகராட்சியில் 10.20 லட்சம் மக்கள் மட்டுமே உள்ளனர் என்று கூறி திட்டத்திற்கான அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது என்று இந்தியா டுடே நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில், மக்கள் தொகை 20 லட்சம் இல்லாத நகரங்களான ஆக்ரா, பாட்னா, போபால் போன்ற நகரங்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே மெட்ரோ திட்ட அனுமதி வழங்கியுள்ளது என்றும் தலைநகரங்கள் அல்லாத பல மாநிலங்களின் இரண்டாம் நிலை நகரங்களுக்கு கூட மெட்ரோ ரெயில் திட்டம் ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும் தமிழக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பிற மாநிலங்களில் மக்கள் தொகை அளவு குறைவாக இருந்தாலும் மெட்ரோ திட்டம் ஒப்புதல் பெற்றுள்ள நிலையில், அதே கொள்கை கோவை மற்றும் மதுரை நகரங்களுக்கு பயன்படுத்தப்படவில்லை. அனைத்து நகரங்களுக்கும் ஒரே மாதிரி விதிமுறைகள் செயல்படுத்தப்பட வேண்டிய நிலையில், தமிழகத்தின் இரண்டாம் நிலை நகரங்களுக்கு மட்டும் இந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனிடையே மத்திய அரசு மெட்ரோ திட்டத்தை நிராகரிக்கவில்லை, விரிவான திட்ட அறிக்கையை (DPR) தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளது என்றும், இது தொடர்பாக விளக்கங்கள் கேட்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News

Video

Join WhatsApp