கோவை குழந்தைகளின் உயிருடன் விளையாட்டு… அலட்சியத்தால் மக்கள் அச்சம்…

கோவை: கோவையின் முக்கிய சந்திப்பில் போக்குவரத்து சிக்னல் பராமரிக்கப்படாத காரணத்தால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் பள்ளி, தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஏராளமான வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

Advertisement

காந்திபுரத்தில் இருந்து அவிநாசி சாலை மார்க்கமாக திருப்பூர், ஈரோடு, சேலம், பெங்களூரு மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளும், டவுன் பேருந்துகளும், ஆயிரக்கணக்கான வாகனங்களும் பாப்பநாயக்கன்பாளையம் வழியாகச் செல்லும் காட்டூர் திட்டச் சாலை வழியாக இயக்கப்பட்டு வருகின்றன.

இதனால், எந்த நேரமும் இச்சாலை பரபரப்பாகக் காணப்பட்டு வருகிறது. இதனிடையே, மணி மேல்நிலைப் பள்ளி அருகே அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னல், கடந்த பல மாதங்களாக பராமரிக்கப்படாமல் உள்ளது.

Faulty traffic signal in Coimbatore

இதனால், தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள், மருத்துவமனைக்குச் செல்பவர்கள், நடந்து செல்லும் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் இந்தச் சாலைச் சந்திப்புப் பகுதியைக் கடக்க மிகுந்த சிரமப்படுகின்றனர். இதனால் விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “சுமார் 8 மாதங்களுக்கு மேலாக இந்த சிக்னல் வேலை செய்வதில்லை. சிக்னலை பராமரிப்பதாக விளம்பரப் பலகை வைத்து விளம்பரம் தேடிக்கொள்ளும் சில தனியார் நிறுவனத்தினர் இதனைக் கண்டுகொள்வதே இல்லை. இதனால் தினமும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் குழந்தைகள் இந்தச் சாலையைக் கடந்து செல்கின்றனர்.

Coimbatore traffic alerts

நான்கு சாலைச் சந்திப்பாக இருக்கும் இந்த இடத்தின் ஒரு புறத்தில் இருந்து மறுபுறம் செல்ல வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். அவ்வப்போது சிறுசிறு விபத்துகள் ஏற்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. ‘விபத்தில்லா கோவை’ என்று விளம்பரப்படுத்தும் போலீசாரும் இந்த சிக்னலைக் கண்டுகொள்ளாமல் இருப்பது மக்களின் அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது” என்று அச்சத்துடன் தெரிவித்தனர்.

இதனிடையே, தனியார் அமைப்பினரின் பராமரிப்பில் போக்குவரத்து சிக்னல்களை ஒப்படைக்கும் போது, அவை முறையாக பராமரிக்கப்படுகிறதா? வெறும் விளம்பரத்திற்காக இப்படி செய்கிறார்களா? என்பதையும் போலீசார் கண்காணிக்க வேண்டும் என்றும், பெரிய விபத்து ஏற்படும் முன்பு இந்த சிக்னலை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

கோவை அருகே பயங்கரம்- மலையில் இருந்து உருண்டு வந்த பாறை…

கோவை: கோவை எட்டிமடை மலை பகுதியில் ராட்சத பாறை மலையில் இருந்து உருண்டு வந்து பாதியில் நின்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே தொடர்ச்சியாக...