கோவை: கோவை கலெக்டர் அலுவலகம், கோர்ட் உள்ளிட்ட இடங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்த வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். 1,500-க்கும் மேற்பட்ட மிரட்டல் மெயில்களை அனுப்பியவர் சிக்கியது எப்படி என்பது குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம், தனியார் பள்ளி உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு தொடர்ந்து போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்த நபரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் போலி வெடிகுண்டு மிரட்டல் வழக்குகளில் சிக்கியுள்ள இவரால், 109 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டும், நேரம் மாற்றப்பட்டும் பல கோடி ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து மிரட்டல்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சரத் சுப்பிரமணியன் சங்கர் (37). இவர் அமெரிக்காவில் உள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் இருந்தபடியே, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள முக்கியமான நிறுவனங்கள் மற்றும் நபர்களை குறிவைத்து சரத் சுப்பிரமணியன் சங்கர் தொடர்ந்து போலி வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்து வந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வணிக விமானங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அரசியல் பிரமுகர்கள், ஓய்வுபெற்ற உளவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் அடங்கிய மின்னஞ்சல்களை அவர் அனுப்பியதாக கூறப்படுகிறது.
2023 முதல் 2025-ம் ஆண்டு வரை மட்டும் 1,500-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்களை அவர் அனுப்பியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலீசாரிடம் சிக்காமல் இருக்க பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
6 மாதங்கள் தீவிர கண்காணிப்பு
தொடர்ச்சியாக வந்த வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சரத் சுப்பிரமணியன் சங்கரின் நடவடிக்கைகள் குறித்து சுமார் 6 மாதங்கள் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டு, அவரது புகைப்படம் மற்றும் அடையாள விவரங்கள் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த சரத் சுப்பிரமணியன் சங்கரை கடந்த ஜூலை 22-ம் தேதி தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தொடர்ந்து விடுக்கப்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல்களால் விமான சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
109 விமான சேவைகள் பாதிப்பு
சரத் சுப்பிரமணியன் சங்கர் அனுப்பிய மிரட்டல்களின் காரணமாக 109 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாகவும், சில விமானங்களின் நேரம் மாற்றப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக விமான நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய துறைகளுக்கு பல கோடி ரூபாய் அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சரத் சுப்பிரமணியன் சங்கர் கைது செய்யப்பட்ட தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக ஏற்கனவே வழக்குகள் பதிவு செய்திருந்த பல்வேறு மாநில போலீசாரும் அவரது விவரங்களை பெற்று விசாரணை மேற்கொண்டனர்.
அந்தந்த மாநிலங்களில் பதிவான போலி வெடிகுண்டு மிரட்டல் வழக்குகளிலும் அவரை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோவையிலும் தொடர் மிரட்டல்
இதற்கிடையே, கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில், கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம், தனியார் பள்ளி உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் சரத் சுப்பிரமணியன் சங்கர் என்பது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் அவர் மீது 3 வழக்குகளை பதிவு செய்தனர். சென்னை சிறையில் இருந்து கோவை அழைத்து வந்த போலீசார். ஏற்கனவே சென்னையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சரத் சுப்பிரமணியன் சங்கரை, கோவையில் பதிவான வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக கோவை போலீசார் சென்னை சென்று கைது செய்தனர்.
பின்னர் அவரை பாதுகாப்பாக கோவைக்கு அழைத்து வந்து, கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்ததைத் தொடர்ந்து சரத் சுப்பிரமணியன் சங்கரை மீண்டும் சென்னைக்கு அழைத்துச் சென்ற போலீசார், அங்குள்ள சிறையில் அடைத்தனர்.
1,500-க்கும் மேற்பட்ட மிரட்டல் மின்னஞ்சல்கள், 109 விமான சேவைகள் பாதிப்பு என பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவர் விடுத்ததாக கூறப்படும் போலி வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்பாகவும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





