கோவை: ஆந்திர மாநிலத்தில் இருந்து பேருந்து மூலம் கோவைக்கு வந்த நபரிடம் இருந்து ரூ.1 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தாமுன் (60) என்பவர் ஹைதராபாத்தில் இருந்து பேருந்து மூலம் கோவை வந்துள்ளார். கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கியபோது, அவர் கையில் வைத்திருந்த பையை மர்மநபர்கள் இருவர் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தாமுன் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் பையில் ரூ.1 கோடி பணம் இருந்ததாகவும், தன்னை நோட்டமிட்டு பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் பணத்தை பறித்துச் சென்றதாகவும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.
Also Read: கோவை ACC சிமெண்ட் ஆலைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு…
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதனிடையே, மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
தாமுன் கோடிக்கணக்கான பணத்தை எதற்காக கோவைக்கு கொண்டு வந்தார்? அவரை பின்தொடர்ந்து வந்தவர்கள் யார்? திட்டமிட்டு இந்த வழிப்பறி நடைபெற்றதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை டோல்கேட் அருகே கோவையில் இருந்து வந்ததாக கூறப்படும் ஒரு காரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அந்த காரில் இருந்த 4 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read: தோழியின் 9 பவுன் நகை திருடி.. காதலனுக்கு KTM பைக் பரிசு! கல்லூரி மாணவி கைது!
பேருந்தில் கோவை வந்து இறங்கிய நபரிடம் ரூ.1 கோடி பணம் வழிப்பறி செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவமும், தொடர்ந்து 4 பேர் பிடிபட்டுள்ளதும் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவைக்கு பேருந்தில் வந்த ஆந்திர நபரிடம் ரூ.1 கோடி பணம் வழிப்பறி செய்யப்பட்டதாக புகார். போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், 4 பேர் பிடிபட்டுள்ளனர்.





