கோவை: கோனியம்மன் கோயில் உண்டியல் முறைகேடு புகார் – அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு
கோவையில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான கோனியம்மன் திருக்கோயில், டவுன்ஹால் மணிக்கூண்டு அருகே அமைந்துள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் தேர்த்திருவிழாவில் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.
இந்தக் கோயிலில் 9 நிரந்தர உண்டியல்களும், 6 தற்காலிக உண்டியல்களும் உள்ளன. கடந்த 15-ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மேற்பார்வையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
இந்த நிலையில், தற்காலிக உண்டியல்களில் ஒன்றிலிருந்த காணிக்கைத் தொகையை, கோயில் செயல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளின் துணையுடன் சில கோயில் ஊழியர்கள் அபகரித்ததாக பக்தர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். இதுதொடர்பாக சென்னை இந்து சமய அறநிலையத்துறை தலைமையகத்திற்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகாரின் அடிப்படையில், இந்து சமய அறநிலையத்துறையின் கோவை மண்டல இணை ஆணையர் ரமேஷ் தலைமையிலான அதிகாரிகள் இன்று கோவை கோனியம்மன் கோயிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
முறைகேடு தொடர்பாக கோயில் வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், உண்டியல் எண்ணிக்கையின்போது பதிவான சிசிடிவி காட்சிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
திருவிழா நடத்துவதற்காக பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் கையாடல் செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார், பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகார் தொடர்பான விசாரணையை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.





