கோவை: கோவையில் போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கான போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பொறுப்பேற்ற பின்பு மூன்று அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், போதுமான போலீசார், பணியாளர்கள் மற்றும் அதிநவீன வசதிகளுடன் கூடிய “சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை” மாநிலம் முழுவதும் உருவாக்கப்படும். இதன்மூலம் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான புகார்களுக்கு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோல தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களைத் தடுத்து, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் பொருட்டு, அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு ஒன்று, மாநகருக்கு இரண்டு என போதைப் பொருட்கள் தடுப்புப் படை அமைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து கோவை மாநகர மற்றும் மாவட்ட போலீசார், போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை அமைப்பதற்கான பணிகளை உயர் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து கோவை மாநகர போலீசார் கூறியதாவது:-
போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கான போலீசார் தயார் நிலையில் உள்ளனர். அதன்படி, கோவை மாநகரில் தெற்கு மற்றும் வடக்கு சரகத்திற்கு தலா ஒரு எஸ்ஐ மற்றும் 5 போலீசாரும், அவர்களுக்கு தலா ஒரு வாகனமும் தயார் நிலையில் உள்ளது.
அதேபோல மாவட்டத்திற்கும் ஒரு எஸ்ஐ தலைமையில் 5 போலீசார் தயார் செய்யப்பட்டுள்ளனர். முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்தவுடன் அவர்கள் செயல்படத் தொடங்குவார்கள்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.



