கோவை: கோவை மாவட்டத்தில் குறைவான மழைப்பொழிவு காரணமாக, அதிக நீர் தேவைப்படும் நெல், கரும்பு போன்ற பயிர்களுக்கு மாற்றாக குறைந்த நீர் தேவைப்படும் பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும் என வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை இயல்பைவிட குறைவான மழைப்பொழிவு பதிவாகியுள்ள நிலையில், அதிக நீர் தேவைப்படும் நெல், கரும்பு போன்ற பயிர்களுக்கு மாற்றாக குறைந்த நீர் தேவைப்படும் பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும் என கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தமிழ்செல்வி தெரிவித்துள்ளார்.
மழைப்பொழிவு குறைவாக உள்ள தற்போதைய சூழ்நிலையில், அதிக நீர் தேவைப்படும் நெல் மற்றும் கரும்பு போன்ற பயிர்களின் சாகுபடியை தவிர்த்து, குறைந்த நீர் தேவைப்படும் மக்காச்சோளம், நிலக்கடலை, பயறு வகைகள் மற்றும் சிறுதானியங்கள் போன்ற மாற்றுப் பயிர்களை தேர்வு செய்து சாகுபடி மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளார்.
தென்னை விவசாயிகள் ஊடுபயிராக பயறு வகைகள் மற்றும் சோளம் போன்ற மாற்றுப் பயிர்களை சாகுபடி செய்யலாம்.
மக்காச்சோளம், சோளம் (Co 32, K 13), கம்பு (Co 10), நிலக்கடலை (VRI 10, கதிரி), உளுந்து (VBN 11) உள்ளிட்ட பயிர் ரகங்களை தேர்வு செய்யலாம்.
மேலும், மக்காச்சோளம் + தட்டைப்பயறு, நிலக்கடலை + தட்டைப்பயறு போன்ற ஊடுபயிர் முறைகளையும், தென்னை + பயறு வகைகள் சாகுபடி முறையையும் விவசாயிகள் பின்பற்றலாம். விதை நேர்த்தி, விதை கடினப்படுத்துதல் (Seed Hardening), மூடாக்கிடுதல் (Mulching) போன்ற தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தலாம்.
இதன் மூலம் நீர்வளத்தை சிக்கனமாக பயன்படுத்துவதுடன், விவசாயிகளின் பொருளாதார பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும். குறுகிய காலத்தில் அறுவடைக்கு வரும் மற்றும் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய பயிர் ரகங்களை தேர்வு செய்து சாகுபடி செய்வது விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீர் பயன்பாட்டை குறைக்கும் வகையில் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் சொட்டுநீர் பாசனம் மற்றும் மழைத்தூவான் (தெளிப்பு) பாசனம் போன்ற நவீன பாசன முறைகளை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
எனவே, தற்போதைய மழை மற்றும் நீர்வள நிலவரத்தை கருத்தில் கொண்டு, விவசாயிகள் தங்களது நிலத்திற்கும் நீர் இருப்புக்கும் ஏற்ற குறைந்த நீர் தேவைப்படும் மாற்றுப் பயிர்களை தேர்வு செய்து சாகுபடி மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் நீர்வளத்தை சிக்கனமாக பயன்படுத்துவதுடன், மண்வளம் மற்றும் நீண்டகால மண் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க முடியும் என கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.





