கோவை: கோவையில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென வீசிய சூறாவளி காற்று கிரிக்கெட் உபகரணங்களை தூக்கியெறிந்தது.
கோவையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. புழுக்கம் அதிகரித்துள்ளதால் இரவு நேரத்திலும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், செட்டிபாளையம் எல்.என்.டி (L&T) பைபாஸ் சாலையில் உள்ள காலி மைதானத்தில், விடுமுறை நாளான இன்று பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தனர்.
பிற்பகல் சுமார் 3 மணி அளவில் ஆட்டம் முடிந்து, இளைஞர்கள் தங்கள் வீடுகளுக்குக் கிளம்பத் தயாராகினர்.
அப்போது, மைதானத்தில் அமர்வதற்காக விரிக்கப்பட்டிருந்த தரைவிரிப்பு (Mat) மற்றும் அதன் மேல் வைக்கப்பட்டிருந்த கிரிக்கெட் பேட் உள்ளிட்ட விளையாட்டு பொருட்களைச் சேகரித்து கொண்டிருந்தனர்.
சுழல் காற்று
அந்தத் தருணத்தில் எதிர்பாராத விதமாக மைதானத்தின் ஒரு பகுதியில் பலமான சுழல் காற்று (Mini Tornado) உருவானது.
கண் இமைக்கும் நேரத்தில் சுழன்றடித்த அந்தக் காற்று, வீரர்கள் வைத்திருந்த பொருட்களை அப்படியே ஆகாயத்தில் தூக்கியது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள், “பேட்டைத் தூக்கிட்டு போகுது… பிடி பிடி பிடி” எனப் பதற்றத்துடன் கூச்சலிட்டனர்.
இந்த விசித்திரமான மற்றும் அச்சமூட்டும் காட்சியை அங்கிருந்த இளைஞர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர்.
வீடியோ காட்சிகள்
தற்போது இந்த வீடியோ காட்சிகள் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
கோடைக் காலத்தில் நிலப்பரப்பில் ஏற்படும் வெப்பச் சலனம் காரணமாக இதுபோன்ற சிறிய ரகச் சுழல் காற்றுகள் அவ்வப்போது ஏற்படுவது வழக்கம் என வானிலை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.


