கோவை : கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம் பெண்ணை காதலித்து, கர்ப்பமாக்கிய காவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர் பில்லூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். பேரூர் பகுதியில் வசித்து வரும் 27 வயது இளம்பெண்ணுடன் பழகிய அவர், திருமணம் ஆகாதவர் போல நடித்து காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
உதயகுமாரின் பேச்சை நம்பிய அந்த பெண், அவருடன் நெருங்கிப் பழகியுள்ளார். பின்னர் இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்து வந்த நிலையில், அந்த பெண் கர்ப்பமானதாக தெரிகிறது. இதையறிந்த உதயகுமார் அதிர்ச்சி அடைந்து, வடவள்ளி மற்றும் அவிநாசி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பின்னர் உதயகுமாருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அந்த பெண் கேள்வி எழுப்பியபோது, “நாம் இருவரும் சேர்ந்து இருக்கும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன், கொலை செய்து விடுவேன்” என மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், பெண்ணை ஏமாற்றி உறவு வைத்து கர்ப்பமாக்கியதுடன், மிரட்டல் விடுத்ததும் உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து காவலர் உதயகுமாரை கைது செய்த பேரூர் மகளிர் போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



