கோவை: சட்டமன்ற நிகழ்வுகளை பார்க்கும் பொழுது மக்களுக்கு ஐயம் ஏற்படுவதாக தோன்றுகிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் உடனடியாக செயல்பட வேண்டும் – அண்ணாமலை
மாணவர்கள் தற்போது மன உளைச்சலில் இருப்பதாகவும், Gen Z மாணவர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபடுவதில் தவறில்லை என்றும் அண்ணாமலை தெரிவித்தார். பொறுமையாக இருந்ததால்தான் நாடு இந்த நிலைக்கு வந்துள்ளதாகவும், மாணவர்கள் சமூக பிரச்சினைகளில் உடனடியாக செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
வேலை தேடுபவர்களாக அல்ல… Job Creators ஆக வேண்டும்!
கல்லூரி மாணவர்கள் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடுபவர்களாக மட்டும் இல்லாமல், வேலைவாய்ப்பை உருவாக்குபவர்களாக உருவாக வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தினார். கல்லூரிகளில் செயல்படும் பல்வேறு கிளப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
AI வந்த பிறகு வேலைவாய்ப்பு குறைகிறது
AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதாக அண்ணாமலை தெரிவித்தார். மத்திய அரசு பணிகளிலும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
கல்லூரி அரசியலை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்
மாணவர் சங்கங்கள் மூலம் பொதுமக்கள், அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் எவ்வாறு பேசுவது என்பதை மாணவர்கள் கற்றுக்கொள்ள முடியும் என அண்ணாமலை தெரிவித்தார். தமிழகத்தில் கல்லூரி அரசியல் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
போதைப்பொருள் விற்பனையை தடுக்க வேண்டும்
தமிழகத்தில் போதைப்பொருட்கள் எளிதாக கிடைப்பதாக தெரிவித்த அண்ணாமலை, அவற்றை விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் இளைஞர்கள் போதைப்பொருட்களை நாடுவதாகவும் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு மாணவர் பேட்சும் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நட வேண்டும்
இயற்கை பேரிடர்கள் அதிகரித்து வரும் சூழலில், மாணவர்கள் பசுமையை பாதுகாக்க வேண்டும் என அண்ணாமலை கூறினார். ஒவ்வொரு பேட்ச் மாணவர்களும் கல்லூரியை விட்டு வெளியேறும் முன் 10 ஆயிரம் மரக்கன்றுகளை நட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
செல்போனுக்கு அடிமையாகும் ‘Zombie Generation’
மாணவர்கள் மற்றும் குழந்தைகள் செல்போன் பயன்பாட்டுக்கு அதிகளவில் அடிமையாகி வருவதாக அண்ணாமலை விமர்சித்தார். சமூக வலைதள நிறுவனங்கள் மக்களின் கவனத்தை பயன்படுத்தி வருவதாகவும், இதனால் ஒரு ‘Zombie Generation’ உருவாகி வருவதாகவும் அவர் கூறினார்.
16 வயதுக்கு கீழ் சமூக வலைதள பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு?
சில நாடுகளில் 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களின் சமூக வலைதள பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அண்ணாமலை, இந்தியாவும் இதனை பரிசீலிக்க வேண்டும் என்றார்.
திரைப்படங்களில் பெண்களை இழிவாக சித்தரிக்கக்கூடாது
சமீபத்திய சில திரைப்படங்களில் பெண்கள் தவறாகவும், தரம் தாழ்ந்தும் சித்தரிக்கப்படுவதாக அண்ணாமலை தெரிவித்தார். பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் குறித்து பேசப்படும் நிலையில், திரைப்படங்களிலும் பெண்களுக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் என்றார்.
சென்சார் போர்டு கடுமையாக செயல்பட வேண்டும்
திரைப்படங்களை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்பது தனது கருத்தல்ல என்றும், ஆனால் சென்சார் விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் அண்ணாமலை கூறினார். திரைப்படங்களுக்கு உரிய வயது வரம்பு மற்றும் சென்சார் குறியீடுகளை திரையரங்குகள் முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
நேபாள சம்பவம்: தமிழக அரசு மீட்புக்குழு அனுப்ப வேண்டும்
நேபாளத்தில் நடைபெற்ற சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என தெரிவித்த அண்ணாமலை, அங்கு உயிரிழந்தவர்களின் உடல்களை தமிழகம் கொண்டு வர தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். உண்மையான தகவல்களை மக்களுக்கு தெளிவாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
‘சட்டமன்றம் டிராமா மன்றமாக மாறக்கூடாது’
தற்போதைய சட்டமன்ற நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவித்த அண்ணாமலை, சட்டமன்றம் மக்கள் பிரச்சினைகளை ஆக்கப்பூர்வமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் விவாதிக்கும் இடமாக இருக்க வேண்டும் என்றார். பழைய பஞ்சாயத்துகளை தீர்த்துக்கொள்ளும் இடமாக சட்டமன்றம் மாறிவிடக்கூடாது என்றும், ‘டிராமா மன்றமாக’ மாறிவிடுமோ என்ற ஐயம் மக்களிடையே ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.





