கோவை: ரத்தினபுரி முதியோர் காப்பகத்தில் செல்போன் சார்ஜ் செய்ய முயன்ற 80 வயது முதியவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் செந்தாமங்கலம் பகுதியை சேர்ந்த ரங்கசாமி (80), கடந்த 2025 அக்டோபர் மாதம் முதல் கோவை ரத்தினபுரி காந்திஜி ரோட்டில் உள்ள முதியோர் காப்பகத்தில் தங்கி வந்தார்.
நேற்று அதிகாலை தனது அறையில் இருந்த பிளக் பாயிண்டில் செல்போனை சார்ஜ் செய்ய முயன்றபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் தூக்கி வீசப்பட்ட ரங்கசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து காப்பக மேலாளர், ரங்கசாமியின் மகன் செந்தில்குமாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து அங்கு வந்த அவர், தந்தையின் உடலை கண்டு கதறி அழுதார்.
பின்னர் தகவலறிந்த ரத்தினபுரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


