கோவை: கோவை இந்துஸ்தான் கல்லூரி மாணவன் அமுதன் கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி சாலை மலுமிச்சம்பட்டி பகுதியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த அமுதன் என்ற மாணவன் சக மாணவர்கள் மற்றும் வெளி இளைஞர்கள் கும்பலால் தாக்கி பின்னர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததால் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தமிழக சட்டசபையிலும் இந்த கொலை வழக்கு எதிரொலித்தது. இக்கொலை சம்பவம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கூடுதலாக நான்கு பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் பிரதீப், பாண்டிச்சேரியில் கௌதம், திருப்பத்தூரில் தருண்குமார், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருமூர்த்தி என்பவரும் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக இந்த கொலை வழக்கு சம்பந்தமாக கைது செய்யப்பட்டவர்களின் மத்த எண்ணிக்கை தற்போது 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இது குறித்து செட்டிபாளையம் காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.




