கோவை: HDFC பரிவர்த்தன் – ராம்கி அறக்கட்டளை மொபைல் மருத்துவ அலகு (MMU) சார்பில் கோவையில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியும், சிறப்பு பல் மருத்துவ முகாமும் நடைபெற்றது.
கோவை நீலிக்கோணாம் பாளையத்தை அடுத்த மதுரைவீரன் கோவில் தெருவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு திட்ட ஒருங்கிணைப்பாளர் ஹஸ்கர் அலி கொக்கராட்டில் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காயத்ரி, காசநோயின் அறிகுறிகள், தடுப்பு நடவடிக்கைகள், ஆரம்ப கட்டத்தில் நோயை கண்டறிவதன் அவசியம் மற்றும் முழுமையான சிகிச்சை பெறுவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பல் மருத்துவ முகாமில் மருத்துவர்கள் தமிழன்பன், அருண்ராஜ், சிவி மோள், சையது இப்ராஹிம் மற்றும் அனீஷ் ஆகியோர் பொதுமக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கினர். முகாமில் பல் பரிசோதனை, மருத்துவ ஆலோசனை, வாய்ச் சுகாதார விழிப்புணர்வு உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டன. மேலும் மேல்சிகிச்சை தேவைப்படுவோருக்கு உரிய பரிந்துரைகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர். நோய் தடுப்பு, சுகாதார விழிப்புணர்வு மற்றும் தரமான மருத்துவ சேவைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள், உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


