கோவை: கோவை வடவள்ளி மருதமலை சாலையில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்டிருந்த ஆழமான குழிக்குள் இருசக்கர வாகனத்துடன் இளம் பெண் ஒருவர் தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் சிக்கிய பெண்ணை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் உடனடியாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சாலையோரத்தில் பாதுகாப்பு தடுப்புகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் முறையாக அமைக்கப்படாத நிலையில், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அந்த இளம் பெண், குழி இருப்பது தெரியாமல் எதிர்பாராத விதமாக அதற்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. இதில், இருசக்கர வாகனமும் குழிக்குள் விழுந்தது.
திடீரென நடந்த இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் உடனடியாக அங்கு திரண்டனர். குழிக்குள் சிக்கியிருந்த பெண்ணை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்தப் பெண் திருமணமாகாதவர் என்பதால் அவரது முகத்தை மறைக்குமாறு அருகில் இருந்தவர்கள் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து, அங்கு பாதாள சாக்கடை பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் பெண்ணை குழிக்குள் இருந்து பாதுகாப்பாக மேலே கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக, பெரிய அளவிலான காயங்கள் இன்றி அவர் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.
வீடியோ
இதனிடையே, மருதமலை சாலை போன்ற முக்கியமான சாலையில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெறும் இடங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாதது குறித்து பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். குறிப்பாக இரவு நேரங்களில் குழிகள் சரியாக தெரியாததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பணிகள் நடைபெறும் பகுதிகளில் தடுப்புகள், எச்சரிக்கை பலகைகள், ஒளிரும் பட்டைகள் மற்றும் போதிய விளக்குகள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவத்தை பதிவு செய்த செல்போன் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
கோவை வடவள்ளி மருதமலை சாலையில் பாதாள சாக்கடை குழிக்குள் இருசக்கர வாகனத்துடன் விழுந்த இளம் பெண், ஜேசிபி உதவியுடன் மீட்கப்பட்டார்.





