கோவை: கோவையின் முக்கிய நீர்வழித்தடங்களில் ஒன்றான நொய்யல் ஆற்றுக்கு புதிய முகம் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி பகுதியில் 4.30 கி.மீ. தூரத்திற்கு ஆற்றின் இரு கரைகளையும் பலப்படுத்தி, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்க ரூ.73.05 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள கோவை குற்றாலத்தில் தொடங்கும் நொய்யல் ஆறு, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக 158.35 கி.மீ. தூரம் பயணித்து, நொய்யல் கிராமம் அருகே காவிரி ஆற்றில் கலக்கிறது.
கோவை மாவட்டத்தில் 67.71 கி.மீ. தூரம் பயணிக்கும் நொய்யல் ஆறு, மாநகராட்சி எல்லைக்குள் 18.56 கி.மீ. தூரத்திற்கு அமைந்துள்ளது. இதில் ஆத்துப்பாலம் சந்திப்பு முதல் நஞ்சுண்டாபுரம் சந்திப்பு வரை 4.30 கி.மீ. தூரத்திற்கு இந்த மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இனி ஆற்றங்கரையில் வெறும் கரைகள் மட்டும் இருக்காது!
திட்டத்தின் ஒரு பகுதியாக, நொய்யல் ஆற்றின் நுழைவுப் பகுதியில் வளைவு அமைப்பது, கரையோரத்தில் படிக்கட்டு வடிவ காபியன் சுவர் அமைப்பது, தடுப்புச் சுவர் மற்றும் கருங்கல் சுவர் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
அதேபோல், ஆற்றங்கரையை பசுமையாக மாற்ற பல்வேறு வகையான மரங்கள் நடப்பட உள்ளன. தோட்டங்கள், கற்களால் அமைக்கப்பட்ட அமர்விடங்கள் மற்றும் ஓய்வு பகுதிகளும் உருவாக்கப்பட உள்ளன.

நடைபயிற்சி… சைக்கிள் பயணம்… பார்வை மேடை!
பொதுமக்கள் ஆற்றங்கரையை பயன்படுத்தும் வகையில் நடைபாதை மற்றும் மிதிவண்டிப் பாதை அமைக்கப்பட உள்ளது. மிதிவண்டி நிலையங்களும் உருவாக்கப்பட உள்ளன. மேலும், ஆற்றின் அழகை ரசிக்கும் வகையில் பார்வை மேடையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நொய்யல் ஆற்றில் குப்பைகள் தேங்குவதைத் தடுக்கும் வகையில் 4 இடங்களில் குப்பைத் தடுப்பு மிதவை அமைப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
இரவில் மின்னும் ஆற்றங்கரை!
ஆற்றங்கரையில் சூரிய ஆற்றல் விளக்குகள், சூரிய ஆற்றல் மர விளக்குகள் மற்றும் பாதுகாப்புத் தூண்கள் அமைக்கப்பட உள்ளன. இதுதவிர, வேலி, சுழலும் கதவுகள், 2 இரும்புப் பாலங்கள் மற்றும் 2 சிறு பாலங்களும் அமைக்கப்பட உள்ளன.
ஆசாத் நகர், போத்தனூர் சாலை (இட்டேரி), வெள்ளலூர் சாலை மற்றும் ராஜீவ் காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் பூங்காக்கள் மற்றும் திட்ட விளக்கத் தகவல் பலகைகள் அமைப்பதற்கான பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
முதலில் முழு ஆற்றுப்பகுதியும் ஆய்வு!
இந்த திட்டத்தை செயல்படுத்தும் முன்பாக, கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள நொய்யல் ஆற்றின் 18.56 கி.மீ. தூரமும் டிரோன் மூலம் ஆய்வு செய்யப்பட்டு, ஆற்றின் எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒப்புதலுக்காக சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.73.05 கோடி திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால், நொய்யல் ஆற்றின் கரைகள் பலப்படுத்தப்படுவதுடன், நடைபயிற்சி, சைக்கிள் பயணம், பொழுதுபோக்கு மற்றும் பசுமை சூழலுக்கான புதிய இடமாகவும் இந்த பகுதி மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.





