கோவை: மூளை சாவு அடைந்த இளைஞரின் உடல்கள் தானமாக தரப்பட்டு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
ஈரோடு மாவட்டம் வெள்ளகோவில் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்குமார்(27). கடந்த வியாழன் கிழமை அன்று இரு சக்கர வாகனத்தில் சென்ற பொழுது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது. மூளைச்சாவு அடைந்ததால் அவரது உடல் உறுப்புகளை தானமாக கொடுப்பதற்கு மருத்துவர்கள் அவரது உறவினரிடம் எடுத்துக் கூறிய நிலையில் குடும்பத்தினர் உடல் உறுப்பு தானம் செய்வதற்கு முன் வந்தனர்.
பின்னர் அரசு மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி தலைமையில் மருத்துவர் குழுவினர் மற்றும் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர்களின் வழிகாட்டுதலின்படி உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது.
அதன்படி அவரது இதயம் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும் ஒரு சிறுநீரகம் மற்றும் கண்கள் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும் மற்றொரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் தானமாக தரப்பட்டது.
தொடர்ந்து உடல் உறுப்பு தானம் செய்யப்பட்ட கார்த்திக் குமாரின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


