திருப்பூர்: மக்கள் நலத் திட்டங்களால் பல்லடம் திமுக வேட்பாளருக்கு 38 முதல் 40 சதவீதம் வரை வாக்குகள் பெற வாய்ப்பு உள்ளதாக கார்மென்ட் தொழில்துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மக்கள் நலத் திட்டங்களால் பல்லடம் தொகுதியில் திமுக வேட்பாளருக்கு 38 முதல் 40 சதவீதம் வரை வாக்குகள் பெற வாய்ப்பு உள்ளதாக திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்மென்ட் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து திருப்பூரைச் சேர்ந்த கார்மென்ட் தொழில்துறையைச் சேர்ந்த முத்துசரவணவேல் மனோகரன் கூறுகையில்,
“கோவை PSG கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் BA ஆங்கில இலக்கியம் மற்றும் MA மாஸ் கம்யூனிகேஷன் படித்துள்ளேன். சிறிது காலம் பத்திரிகைத்துறையில் பணியாற்றிய பின்னர் தற்போது கார்மென்ட் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். தேர்தல் வியூகம் மற்றும் கணிப்புகள் குறித்து தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறேன்.
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பல்லடம் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளராக க. செல்வராஜ் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் அதிமுக கூட்டணி வேட்பாளராக கே.பி. பரமசிவம் போட்டியிடுகின்றனர். பரமசிவம் 2011ஆம் ஆண்டு பல்லடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர்.
இந்த தொகுதியில் மொத்தம் 3,32,000 வாக்காளர்கள் உள்ளனர். இதில் சுமார் 90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதாவது, சுமார் 3 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் பல்லடம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன் 1,26,903 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் முத்துரத்தினம் 94,212 வாக்குகள் பெற்றார். இதனால் 32,691 வாக்குகள் அதிகம் பெற்று அதிமுக வேட்பாளர் ஆனந்தன் வெற்றி பெற்றார்.
ஆனால் தற்போது கூட்டணி பலத்துடன் திமுக வேட்பாளராக களமிறங்கியுள்ள க. செல்வராஜ், கடந்த தேர்தலில் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர்.
பல்லடம் தொகுதி பெரும்பாலும் கிராமப்புறங்களை உள்ளடக்கியது. திமுக அரசு அமல்படுத்திய பெண்கள் உரிமைத் தொகை, பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவச காலை உணவு திட்டம், பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவசப் பயணம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதனால், பல்லடம் தொகுதியில் திமுக வேட்பாளர் க. செல்வராஜ் மக்கள் ஆதரவுடன் 38 முதல் 40 சதவீதம் வரை வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார்.



