கோவை: கோவையில் சோதனைச் சாவடி உட்பட பல்வேறு பகுதிகளில் சொட்டு மருந்து ஊற்றும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
இன்று தமிழ்நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தானது இன்று வழங்கப்படுகிறது.
அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் பேருந்து நிலையம் விமான நிலையம் ரயில் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் அனைத்து பகுதிகளிலும் போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான ஏற்பாடுகள் மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளன. தமிழக முதல்வர் விஜய் சென்னையில் போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்ததை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கோவை மாவட்டத்தில் 1124 மையங்களும் நகர்ப்புறங்களில் 491 மையங்களும் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அது மட்டும் இன்றி நடமாடும் சிறப்பு மையங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை தலைமை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனைத்து மையங்களிலும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி கோவையில் தமிழ்நாடு கேரளா எல்லையான வாளையார் சோதனை சாவடியிலும் சொட்டு மருந்து முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு எல்லை பகுதிகளில் சொட்டு மருந்து குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.



