கோவை: லஞ்சம் குறித்த வெறுப்பே திமுக தோற்க காரணம் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட ராமநாதபுரம் பெரியார் நகர் பகுதியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் அப்பகுதி மக்களோடு பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை பார்வையிட்டார்.
முன்னதாக, சியாமா பிரசாத் அவர்களின் புகைப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மரக்கன்று நட்டு வைத்தார்.
மேலும், இப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த Water ATM குடிநீர் இயந்திரத்தை பார்வையிட்டார். அப்போது இயந்திரம் சில நாட்களாக வேலை செய்யவில்லை என அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். இரண்டு நாட்களில் இயந்திரம் சரி செய்யப்படும் என அவர் உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன் பேசியதாவது,
‘ஜன சங்கத்தின் நிறுவனரும் ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்குவதற்காக கடுமையான போராட்டங்களை மேற்கொண்டு சிறையில் உயிர்நீத்த சியாமா பிரசாத் ஜி அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சிகள் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கோவை தெற்கு தொகுதியில் ராமநாதபுரம் மண்டலில் இன்று மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு மரம் நடப்பட்டது. இதேபோல் மாணவர்களுக்கான கருத்தரங்குகள் கண்காட்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்பகுதியில் நான் எம்எல்ஏவாக இருந்தபோது அமைக்கப்பட்ட வாட்டர் ஏடிஎம் இயந்திரம் வேலை செய்யவில்லை என பொதுமக்கள் புகார் அளித்தனர். அதனை பார்வையிட்டு உடனடியாக சரி செய்யுமாறு மாநகராட்சி நிர்வாகத்தினரிடம் கூறியுள்ளேன்’ என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசியவர், இயக்குனர் பாக்யராஜாவின் மறைவிற்கு இரங்கல்களை தெரிவித்துக் கொண்டார், கொங்கு பகுதியில் இருந்து திரைத்துறைக்கு சென்று உச்சத்தை தொட்டவர் என குறிப்பிட்டார்.
தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்படுபவர், தமிழகத்தின் தேவைகளை பிரச்சினைகளை மத்திய அமைச்சர்களோடு பேசி பெற்றுத் தர வேண்டும். அந்த அளவுக்கு முக்கியமான பணியாகும். அதை தமிழக அரசு வழங்குவது அவர்களின் விருப்பம் ஆனால் அதில் சர்ச்சை எழும்போது அதற்குரிய பதிலளிக்க வேண்டும்.
காவிரி பிரச்சனை பொருத்தவரை தமிழக முதல்வர் தனது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கர்நாடக முதல்வரோடு சுமுகமாக பேசி தீர்க்க வேண்டும். தமிழக அரசின் அனுமதி இன்றி எந்த அணையும் கட்டக் கூடாது என்பது தான் மத்திய அரசின் நிலைப்பாடு.
தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு பலரும் செல்வது இயல்பான ஒன்றாகும், ஆனால் மிகவும் புத்திசாலித்தனமாக திட்டமிட்ட ரீதியில் சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து பெரும்பான்மை அடைய இந்த அரசு முயற்சிக்கிறது, இதை குதிரை பேரும் என சொல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்.
தேர்தலுக்கு முன்பு கொள்கை கூட்டணி என முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின் பெருமையாக பேசி வந்தார், இப்போது அந்த கூட்டணி சிதறி உள்ளது, எது கொள்கை என திமுக யோசிக்க வேண்டும். உறுதியான கொள்கையோடு தேசிய சிந்தனையோடு மக்கள் வளர்ச்சிக்காக உள்ள கட்சி பாஜக தான்.
பொதுவாக ஆன்லைனில் தேர்வுகள் நடத்தப்படும் போது சைபர் பாதுகாப்பு சார்ந்த பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது அவற்றை சரி செய்ய வேண்டியது அவசியமாகும்.
அண்ணாமலை புதிய இயக்கம் துவங்கியுள்ளார். அவர் கட்சிக்கு எதிராக வந்தால் அப்போது கருத்து சொல்வதுதான் சரியாக இருக்கும். அனுபவமிக்கவர்களையும் புதியவர்களையும் ஒருங்கிணைத்து செல்வதுதான் ஒரு கட்சிக்கு சிறந்ததாகும். அந்த வகையில் பாஜகவில் அனுபவமிக்கவர்களுக்கும் புதியவர்களுக்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சி அண்ணாமலைக்கு உயர்ந்த பொறுப்புகளை கொடுத்தது. அவரும் கட்சிக்காக சிறப்பாக உழைத்தார்.
இந்து மதத்தில் உள்ள தீண்டாமை காரணமாக மற்றொரு மதத்திற்கு மாறுவதாக தெரிவித்தாலும், இட ஒதுக்கீடு சலுகை கேட்கப்படும் வழக்கில் உயர்நீதிமன்றம் சிறப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. இதைதான் சட்டப்பேரவையில் நான் பேசினேன் அப்போது திமுகவினர் எதிர்த்தனர்.
இப்போதும் சட்டப்பேரவை நிகழ்வுகள் முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை, எதிர்க்கட்சிகள் பேசும்போது நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்படுகிறது.
தவெக அமைச்சர்களில் சிலர் சிறப்பாக செயல்படுகின்றனர். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பல்வேறு கோவில்களுக்கு சென்று ஆய்வு செய்கிறார், கோவில் பணத்தை பக்தர்களின் வசதிகளுக்காக செலவிட வேண்டும் என்பது வரவேற்கத்தக்கது.
பார்ட்டி பண்டு வாங்க மாட்டோம் என முதல்வர் தெரிவித்துள்ளார் இது நல்ல விஷயமாகும். கடந்த திமுக ஆட்சியில் லஞ்சம் அதிகமாக இருந்தது. இதனால் ஏற்பட்ட கடுமையான வெறுப்பு காரணமாகவே மக்கள் திமுகவை தோற்கடித்தனர்.
அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தை பொருத்தவரை அரசு கமிட்டி அமைத்து தவறு செய்தவர்களை கைது செய்துள்ளது, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய தண்டனை வழங்கப்படும் என தெரிவித்தார்.



