கோவை: கவிஞர் புவியரசு உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
இரண்டு முறை சாகித்திய அகாடமி விருது பெற்ற கோவையை சேர்ந்த கவிஞரும் எழுத்தாளருமான புவியரசு 96 வயதில் நேற்று உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் விஜய் உட்பட பல்வேறு அரசு துறை சார்ந்த அதிகாரிகள் அலுவலர்கள் திரை பிரபலங்கள் கவிஞர் சங்கத்தினர் எழுத்தாளர்கள் சங்கத்தினர் ஆகியோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்துவதற்கு ஆவணம் செய்யப்பட்ட நிலையில் தமிழக முதல்வர் விஜய் இன்று காலை அரசு மரியாதை செலுத்துவதற்கு உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள மின் மயானத்தில் அவரது உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
கோவை மாவட்ட வருவாய் அலுவலர் மதுராந்தகி, மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் சுனில் ஆனந்த் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
பெரியநாயக்கன்பாளையம் டிஎஸ்பி கனகசபாபதி பெரியநாயக்கன்பாளையம் காவல் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தி அரசு மரியாதைக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்த நிகழ்வில் கவிஞர் புவியரசின் உறவினர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.


