தைரியம் இல்லாதவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள்- செந்தில்பாலாஜி விமர்சனம்…

கோவை: தைரியம் இல்லாதவர்கள் தான் ஆட்சியில் இருக்கிறார்கள் என செந்தில்பாலாஜி விமர்சித்துள்ளார்.

கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. இதில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி பங்கேற்றார். இந்த நிகழ்வில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி, துணை மேயர் வெற்றி செல்வம் திமுக சொத்து பாதுகாப்பு குழு துணை தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் மற்றும் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு செந்தில் பாலாஜிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செந்தில் பாலாஜி, சட்டமன்ற அலுவலகத்தில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இன்று முதல் மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று அதற்கு தீர்வு காணக்கூடிய அலுவலகமாக செயல்படும் என்றார். வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு பெறுவதாகவும் அதனை தொடர்ந்து ஒவ்வொரு வார்டாகச் சென்று பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்று அதற்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக கூறினார்.

ஆளும் கட்சியாக இல்லாத பொழுது மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியுமா என்ற கேள்விக்கு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாகவும் ஏற்கனவே கடந்த ஐந்து ஆண்டுகளில் கோவை மாநகராட்சியை பொருத்தவரை 8,700 கோடி ரூபாய் மதிப்பில் சாலை வசதிகள், சாக்கடை வசதிகள், குடிநீர் திட்டங்கள் ஆகியவற்றை மேற்கொள்வதற்கு அன்றைய முதல்வர் நிதிகளை கொடுத்து பணிகளை மேற்கொண்டு இருப்பதாகவும் கோவை மாநகராட்சியை பொருத்தவரை 1706 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அப்பொழுது விடுபட்ட பணிகளை செய்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

Advertisement

மின்சாரத் துறையில் ஹார்ட் டிஸ்க் தொலைந்தது குறித்தும் தனிப்பட்ட முறையில் தன்னை மிரட்டி பார்க்கிறார்கள் என்று மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழ்நாட்டில் ஒரு அமைச்சரையே மிரட்டக்கூடிய அளவிற்கு ஒருவருக்கு துணிச்சல் இருக்கிறது என்றால் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு உள்ளது என்று பார்க்க வேண்டும் அப்படி இருக்கும் பொழுது சாமானியர்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும் என கூறினார். தமிழ்நாட்டில் மின்வெட்டு காரணமாக தமிழக மக்கள் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தி வருவதை குறிபிட்ட அவர் இதுவரை மின்துறை அமைச்சர் மின்விநியோகத்திற்காக அதிகாரிகளை அழைத்து முழுமையான ஆய்வுக் கூட்டத்தை மேற்கொள்ளவில்லை, என்று கூறினார்.

திமுக ஆட்சியில் மின் விநியோகம் எந்த ஒரு தடைகளும் இல்லாமல் சீராக வழங்கப்பட்டதாகவும் 24 மணி நேரமும் பணியாளர்கள் பணியாமர்த்தப்பட்டு அப்பொழுது வேலை நடந்ததாகவும் ஆனால் தற்பொழுது வேலை செய்வதை விட்டுவிட்டனர் என்றார். டெண்டர் சம்பந்தமாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறியதாக செய்திகளில் பார்த்ததாக தான் டெண்டர் என்பது அதற்காக தனிக்குழு உள்ளது அதன்பின் பல்வேறு செயல்முறைகள் உள்ளது என்று குறிப்பிட்ட அவர் அதில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் இருப்பார்கள் அதில் ஏதாவது ஒரு குழு தவறு நடந்தாலும் மறுக்குழு டெண்டரை ரத்து செய்து விடும் என்று தெரிவித்தார்.

துறை சார்ந்த அமைச்சர்கள் அந்த துறை சார்ந்து முழுமையாக ஆராயாமல் அரைகுறை தனமாக நிர்வாகம் நடத்துவதாகவும் அவர்களிடம் சுத்தமாக நிர்வாகத் தன்மை இல்லை என்றும் அதனால் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருவதாக விமர்சித்தார். மேலும் தாங்கள் ஆட்சிக்கு வரும்பொழுது மின்சாரத் துறையில் ஒன்றரை லட்சம் கோடி கடன் இருந்ததாகவும் வருடத்திற்கு 15 ஆயிரம் கோடி வட்டி கட்டி வந்ததாகவும் கூறினார். மின்வெட்டு தொடர்பாக உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதை விட்டுவிட்டு ஏதோ தவறுகள் நடந்ததைப் போல தோற்றத்தை உருவாக்குவது ஹார்ட் டிஸ்க் தொலைந்து விட்டது என்று கூறுவது என்று செய்கிறார்கள் என்றும் தவறு நடந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் போதும் அதுதான் அரசினுடைய கடமை சம்பந்தப்பட்ட துறை அமைச்சரின் கடமை என்றும் தெரிவித்தார். முதலில் மின்வெட்டை சீரமையுங்கள் பிறகு துறையை சீரமைக்கலாம் துறைகள் எல்லாம் சீராக தான் உள்ளது என்று தெரிவித்தார். அதுமட்டுமின்றி மின் வெட்டுக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

எதிர்க்கட்சிக்கு ஆதரவான அலுவலர்கள் தவறு செய்கிறார்கள் என்று கூறுவது தொடர்பான கேள்விக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் அரசு மாறலாம் அதிகாரிகள் மாற மாட்டார்கள் இந்த அரசாங்கமாக இருந்தாலும் அதை மின்வாரிய அதிகாரிகள் தான் பணிபுரிவார்கள் என தெரிவித்தார். ஒரு சதவிகித கருப்பு ஆடுகள் என்று அவர்கள் கூறினால் மீதமுள்ள 99% பேரை கொண்டு அவர்களை கண்டுபிடிக்கலாம் அல்லவா என்றும் கேள்வி எழுப்பிய அவர் ஆடவே தெரியாத வீதி கோனல் என்பார்களாம் என்று விமர்சித்தார். துறை சார்ந்த புரிதலும் இல்லை புரிந்து கொள்வதற்கான தகுதியும் இல்லை என்றார்.தவறு நடந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தவறு நடந்ததை பூதாகரமாக்கும் ஒரு தோட்டத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் அந்த முயற்சி ஒருபோதும் எடுபடாது என்று தெரிவித்தார்.

மதிமுக துரை வைகோ திமுக சின்னத்தில் போட்டியிட்டது துரதிஷ்டவசமானது என்று கூறியது குறித்தும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்தது குறித்துமான கேள்விக்கு பதில் அளித்த செந்தில் பாலாஜி, தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு கால அவகாசம் கேட்கலாம் ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு கால அவகாசம் கொடுக்க முடியாது அதனை ஏற்றுக் கொள்ள முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார். சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு கால அவகாசம் கேட்பது என்பது இந்த அரசு தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் இந்த அரசு மக்களின் நன்மதிப்பை இழந்துள்ளது என்று தெரிவித்தார்.

கோவையில் 10 தொகுதிகளில் நின்ற (தவெக) வேட்பாளர்களில் எத்தனை பேர் மக்களை முழுமையாக சந்தித்து வாக்குகளை பெற்றார்கள்? ரீல்ஸ் மூலமாக வந்த ஆட்சி தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைந்த பிறகும் அதே முயற்சியை தான் மீண்டும் எடுக்கிறார்கள் இந்த ஆட்சி ரியல் ஆட்சி இல்லை ரீல்ஸ் ஆட்சி தான் என்று விமர்சித்தார். இதனை மக்கள் உணர்ந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள் என்றும் போகப் போக முழுமையாக உணர்வார்கள் என்றும் தெரிவித்தார்.

கழகங்கள் மறையட்டும் என்று அண்ணாமலைக்கு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது தொடர்பான கேள்விக்கு திமுகவை அழிக்க நினைப்பவர்கள் தான் அழிந்து போயிருக்கிறார்கள் ஒழிந்து போயிருக்கிறார்கள் திமுக என்பது ஒரு ஆலமரம் என்று பதில் அளித்தார். கரூர் சம்பவம் பற்றி பேச வேண்டும் என்றால் நீண்ட நேரம் பேச வேண்டும் அது மிகவும் மோசமான ஒரு துயர சம்பவம் அந்த சம்பவம் நடந்தும் கூட யாரும் அங்கு செல்லவில்லை ஆறுதல் கூட கூறுவதற்கு செல்லவில்லை என்று தமிழக வெற்றிக்கழகத்தினரை சுட்டிக்காட்டிய செந்தில் பாலாஜி திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பும் பொழுதும் கூட அந்த கட்சியின் தலைவர் சென்றதையெல்லாம் பார்த்தோம் தற்பொழுது அதை கட்சி அரசு அமைத்து இத்தனை நாட்கள் ஆகிறது என்றார். இந்த அரசை பொருத்தவரை வெளிப்படை தன்மையில்லை என்று மக்கள் கூறுகிறார்கள், மக்களிடம் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என்று விவசாய கடன் தள்ளுபடி சுட்டிக்காட்டினார். சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இந்த அரசு இருப்பதாகவும் விமர்சித்தார்.

எம்ஜிஆர் என்று குறிப்பிட்டு கொள்வது தொடர்பான கேள்விக்கு, வாக்குகளை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காக அதனை மடைமாற்றமாக பயன்படுத்துகிறார்கள் என்று கூறினார். திருச்சியில் விஜய் பேசியதை சுட்டிக்காட்டிய அவர் தேர்தல் பிரச்சார பயணத்தில் போட்ட ஸ்கிரிப்ட் இன்றும் மாற்றப்படவில்லை என்று தெரிவித்தார். இன்றைய சூழலில் சட்டமன்ற பொது தேர்தல் மீண்டும் நடந்தால் 200 தொகுதிகளில் திமுகஜ் வெற்றி பெறும் என்றும் கூறினார். இடைத்தேர்தலில் கழகத் தலைவரின் உத்தரவை பொருத்தே அதைப்பற்றி பேச முடியும் என்று கூறினார்.

சட்டமன்ற பிரச்சனையில் இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார். பெரியார் அறிவுலகம் தொடர்பான கேள்விக்கு துரதிஷ்டவசமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது புதிய அரசு தற்போது ஆய்வுகளை மேற்கொண்டு உள்ளார்கள் அதில் குறைகள் உள்ளது என்று அவர்கள் கூறினால் எதில் குறைகள் உள்ளது என்பதை கூற வேண்டும் அதை விட்டுவிட்டு கூடுதல் வசதிகள் மேற்கொள்ளப்படுவதை குறைகள் என்று குறிப்பிடக் கூடாது என்று தெரிவித்தார்.

தொகுதி மக்கள் பிரச்சினைக்காக முதல்வரை சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு தற்பொழுது குறைகளை கேட்டு அறிந்து வருகிறோம் தேவைப்பட்டால் கேட்டுவிட்டு அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பதில் அளித்தார். திமுகவை பொருத்தவரை தமிழக வெற்றி கழக அரசு செய்யக்கூடிய தவறுகளை தயக்கமில்லாமல் சட்டமன்றத்தில் சுட்டிக்காட்டும் என்றும் தைரியமாக சட்டமன்றத்திலும் பொதுவெளியிலும் தட்டி கேட்போம் என்றும் தெரிவித்தார்.

தவறுகளை சுட்டிக் காட்டுவது எதிர்க்கட்சியின் கடமை அதனை தவறாமல் நாங்கள் செய்வோம் அதில் ஒரு துளி கூட பின் வாங்க மாட்டோம் என்றும் தெரிவித்தார். திமுக என்றும் பயபட்டது கிடையாது மிசாவை கண்டே பயப்படாத ஒரு அஞ்சாத இயக்கம் திமுக, திமுகவில் இருப்பவர்கள் சிறைகளை கண்டு பயந்தது இல்லை பயப்பட போவதும் இல்லை இவர்களுக்கு வேண்டுமானால் பயம் இருக்கலாம் என்று தமிழக வெற்றி கழகத்தினரை பெயர் குறிப்பிடாமல் விமர்சித்த அவர் கரூர் சம்பவத்தில் ஓடிச் சென்று விமானம் ஏறிச்சென்று ஆறுதல் தெரிவிப்பதற்கு கூட பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் தைரியம் இல்லாதவர்கள் தான் ஆட்சியில் இருக்கிறார்கள் என முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை விமர்சித்தார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

எம்.எல்.ஏ கேட்டவுடன் ஓடிவந்து திருக்குறள் ஒப்புவித்த அரசு பள்ளி மாணவன்…

கோவை சூலூர் அரசுப் பள்ளியில் எம்.எல்.ஏ கேட்ட கேள்விக்கு மாணவன் உடனடியாக திருக்குறள் ஒப்புவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பள்ளி வரவேற்பு நிகழ்வில் எம்.எல்.ஏ என்.எம். சுகுமார் கலந்து கொண்டார்.