கோவை: குடிப்பழக்கத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் (54).
இவர் கடந்த 30 ஆண்டுகளாக கோவையில் தங்கி பல்வேறு ஓட்டல்களில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.
தற்போது கோவை சின்னவேடம்பட்டி, உடையாம்பாளையம் நாயகி ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை செய்து கொண்டு, அதே ஓட்டலின் பின்புறம் உள்ள அறையில் தங்கியிருந்தார்.
சேகருக்கு கடுமையான மதுப் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் ஓட்டலின் உரிமையாளரான ரமேஷ் என்பவர் நேற்று முன்தினம் சேகர் அறைக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு சேகர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சேகரின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


