கோவை: வெள்ளியங்கிரி மலையில் மூச்சுத்திணறலால் பக்தர் உயி*ழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடல்நலக்குறைவு இருந்தும் மீண்டும் மலை ஏறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள வழுக்குப்பாறை, கண்ணமநாயக்கனூர் பகுதியை சேர்ந்த மயில்சாமி (32) என்பவர் இன்று அதிகாலை தனியாக வெள்ளியங்கிரி ஆண்டவர் மலை ஏற்றத்திற்கு சென்றுள்ளார்.
4-வது மலைப் பாதையில் உள்ள முழங்கால் திட்டு பகுதியில் சென்றபோது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் சுமைப் பணியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று டோலி மூலம் மயில்சாமியை மீட்டு அடிவாரத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.
விசாரணையில், மயில்சாமி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பும் வெள்ளியங்கிரி மலை ஏறியபோது நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் பாதியிலேயே திரும்பிச் சென்று சிகிச்சை பெற்றிருந்தது தெரியவந்துள்ளது. மேலும், அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு உறவினர்கள் “தற்போது மலை ஏற வேண்டாம்” என எச்சரித்திருந்தும், யாரிடமும் தெரிவிக்காமல் இன்று அதிகாலை மீண்டும் தனியாக மலை ஏறியதாக கூறப்படுகிறது.
7 வயது மகனை தவிக்கவிட்டு மயில்சாமி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரையும், பக்தர்களையும் கண்கலங்க வைத்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், கோடை வெப்பம் மற்றும் ஆக்சிஜன் குறைபாடு காரணமாக இதய நோய் மற்றும் மூச்சுத்திணறல் பிரச்னை உள்ளவர்கள் வெள்ளியங்கிரி மலை ஏறுவதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


