கோவை: கோவையில் அதிகாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த கணவன் மனைவி பாலை திருடி செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை மாநகரின் பல்வேறு வீதிகளில் பால் முகவர்கள் அதிகாலையிலேயே பொதுமக்களுக்குப் பால் விநியோகம் செய்து வருகின்றனர். ஆவின் மற்றும் தனியார் நிறுவன பால் பாக்கெட்டுகள் பிளாஸ்டிக் ட்ரேக்களில் அடுக்கி, முகவர்கள் குறிப்பிடும் இடங்களில் வாகனங்கள் மூலம் இறக்கி வைக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், இன்று அதிகாலை 3.30 மணி அளவில் கோவை மாநகர் கோவில்மேடு பகுதியில் உள்ள பால் முகவர் டேவிட் என்பவருக்குச் சொந்தமான பூத்தில் பால்கள் ட்ரேயில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த கணவன் மற்றும் மனைவி, ஆள் நடமாட்டம் இல்லாததைச் நோட்டமிட்டு, அடுக்கி வைக்கப்பட்டு இருந்த ட்ரேக்களில் இருந்து பால் பாக்கெட்டுகளைச் எடுத்துத் தாங்கள் கொண்டு வந்த பிளாஸ்டிக் பக்கெட்டில் போட்டுக் கொண்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
பின்னர் டேவிட் பாக்கெட்டுகளைச் சரிபார்த்த போது எண்ணிக்கை குறைவாக இருப்பதை அறிந்துள்ளார். பின்னர் அங்கு பொருத்தி இருந்த சி.சி.டி.வி கேமராவை பார்த்த போது, கணவன் – மனைவி இருவரும் கூட்டாகச் சேர்ந்து பால் பாக்கெட்டுகளைத் திருடும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இந்தச் சி.சி.டி.வி காட்சிகளை சமூக வலைத்தளங்களில் டேவிட் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.


