கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பீர் பாட்டிலுடன் புகுந்த இளம்பெண் ஒருவர், “முதல்வர் விஜய் உடனடியாக வர வேண்டும்” எனக் கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார்.
கையில் பீர் பாட்டிலுடன் வளாகத்திற்குள் அமர்ந்திருந்த அவர், திடீரென பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த போலீசார் முயன்றபோது, “தமிழக முதலமைச்சர் விஜய் உடனடியாக இங்கு வர வேண்டும். அவரை பார்த்தே ஆக வேண்டும்” என உரக்கக் கத்தி ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து பெண்கள் பாதுகாப்பிற்காக இயக்கப்படும் ‘பிங்க்’ ரோந்து வாகனம் வரவழைக்கப்பட்டு, அந்தப் பெண் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதாக போலீசார் தெரிவித்தனர். அவர் மதுபோதையில் இருந்தாரா அல்லது போதை மருந்து பயன்படுத்தியிருந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீடியோ
மேலும், அந்தப் பெண்ணுக்கு மனநிலை பாதிப்பு இருக்கலாம் என சந்தேகித்த போலீசார், அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இளம்பெண் ஒருவர் பீர் பாட்டிலுடன் புகுந்து முதலமைச்சரை பார்க்க வேண்டும் என ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



