கோவை: கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் கொண்டம்பட்டி ஊராட்சியில் 10,000 மரக்கன்றுகள் நடும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் கொண்டம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மேய்ச்சல் நிலத்தில் தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ், 10,000 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகன்பாபு, ராஜேஸ்குமார், சரவணன், கலாராணி, தலைமை மனித வள நிர்வாக அலுவலர் (வாட்டர் டெக்) லயோனல் பால் டேவிட், தனியார் தொண்டு நிறுவன பணியாளர்கள், அலுவலர்கள், ஈஸ்வர் பொறியியல் கல்லூரி மாணாக்கர்கள் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஊக்குவிக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம், கொண்டம்பட்டி ஊராட்சிப் பகுதியில் அடர்வனம் உருவாக்குதல் பணி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் நடைபெற்று வருகிறது. வாட்டர் டெக் என்ற தனியார் நிறுவன பங்களிப்புடன் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நிலத்தடி நீர் செறிவூட்டும் பணியும் நடைபெற்றுள்ளது.
மேலும் இந்நிறுவனத்தினர் பல திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். இன்றைய தினம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ள பகுதி முன்பு பயன்பாடின்றி இருந்த நிலப்பரப்பினை சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலன் கருதி பயனுள்ள வகையில் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர் சேமிப்பு மற்றும் காடுவள மேம்பாட்டு முயற்சிகளில் ஈடுபட்டு வரும் வாட்டர் டெக் நிறுவனம் மற்றும் அதனுடன் இணைந்த குழுவினருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இப்பகுதியில் நிலத்தடி நீர் வளத்தை மேம்படுத்துவது மிகவும் அவசியமாகும். இதற்காக நிலத்தடி நீர் செறிவூட்டும் குளங்கள், மழைநீர் சேகரிப்பு அமைப்புகள், பயன்பாடின்றி இருந்த ஆழ்துளைக் கிணறுகளை மீளச் செயல்படுத்தும் கட்டமைப்புகள் மற்றும் புதிய நீர்வள வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
மரக்கன்றுகள் வளர்ச்சிக்கு தேவையான நீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், கால்நடைகளுக்குத் தேவையான தீவனப் பயிர்களையும் இப்பகுதியில் வளர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் பயனாக தீவன பயிர்களை இப்பகுதியிலுள்ள விவசாயிகளுக்கு வழங்கி. பயன்பெற செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மாணவர்கள் அனைவரும் மரக்கன்றுகள் நடுவதில் மட்டுமல்லாமல், அவற்றின் வளர்ச்சியையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். ஓராண்டுக்குப் பின்னர் மீண்டும் இப்பகுதிக்கு வருகை தந்து, இன்று நடப்பட்ட மரங்களின் வளர்ச்சியையும், திட்டத்தின் விளைவுகளையும் நேரடியாகக் கண்காணிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பச்சாபாளையம் ஊராட்சி, தேகாணி பகுதியில் தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில், 3.55 ஏக்கரில் குளம் தூர்வாரப்பட்ட பணியினை நேரில் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்தும், மழைக் காலங்களில் நிலத்தடி நீர் அளவு உயர்வுக்கான செயல்பாடுகள் குறித்தும், இதன் மூலம் சுற்று வட்டார பகுதிகளிலுள்ள விவசாய நிலங்கள் பயன்பெறும் செயல்முறை குறித்தும் துறைச்சார்ந்தவர்களிடம் கேட்டறிந்தார்.


