கோவை: கோவை ரயில் நிலையத்தில் 350 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு மர்ம நபர்களை போலிசார் தேடி வருகின்றனர்.
கோவை ரயில் நிலையத்தில் 350 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதை கடத்தி வந்த மர்ம நபர்களை போலிசார் தேடி வருகின்றனர்.
கோவையில் போதை பொருள்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் வட மாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தி வரப்படுவதை தடுக்க கோவை ரயில் நிலையத்தில் போலீசார் ரோந்து சென்றனர். அப்பொழுது நடைமேடை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான ஒரு பெரிய பார்சல் கிடந்தது.
அதை போலீசார் பிரித்து பார்த்த போது தமிழக அரசு தடை செய்யப்பட்ட 350 கிலோ பொருட்கள் இருந்தன அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதை அடுத்து புகையிலை பொருள்களை வெளி மாநிலத்தில் இருந்து கோவைக்கு ரயில் மூலம் மர்ம நபர்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.
அதை எந்த ரயிலில் கடத்தி வந்தார்கள் ? கடத்தி வந்த நபர்கள் யார் ? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து ரயில்வே போலீசார் கூறும் போது
கோவை ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து புகையிலை பொருட்கள் கடத்தி வந்த நபர்கள் யார் ? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கோவை மாநகரில் பீளமேடு, சரவணம்பட்டி, சுந்தராபுரம், போத்தனூர், குனியமுத்தூர், செல்வபுரம், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து சென்றனர். அப்பொழுது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 15 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான புகையிலை பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என தகவல் தெரிவித்துள்ளனர்.



