கோவை: மனைவிக்கு தொல்லை கொடுத்ததால் நண்பனை கொன்று தென்னந்தோப்பில் புதைத்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்த காளியாபுரத்தில், உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த பிரமிளா என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இங்கு ஆழியார் பகுதியைச் சேர்ந்த சந்திரன் – காளீஸ்வரி தம்பதியினர் தங்கி இருந்து தோட்ட வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆழியார் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி என்பவருக்கும் சந்திரனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் நண்பர்களாக பழகி வந்தனர். வேலை தேடி வந்த கருப்புசாமியிடம், சந்திரன் தனது மனைவியின் செல்போன் எண்ணை கொடுத்து வேலை இருந்தால் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
இதன் பின்னர், கருப்புசாமிக்கு காளீஸ்வரி மீது தவறான எண்ணம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர் அடிக்கடி காளீஸ்வரியின் செல்போனுக்கு அழைத்து ஆபாசமாக பேசி, ஆசைக்கு இணங்க வற்புறுத்தியதாக தெரிகிறது.
இதுகுறித்து காளீஸ்வரி தனது கணவர் சந்திரனிடம் தெரிவித்து அழுதுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்திரன், கருப்புசாமியை கொலை செய்ய திட்டமிட்டார்.
அதன்படி, கடந்த 25ஆம் தேதி கருப்புசாமியை தோட்டத்திற்கு வரவழைத்து, அவருடன் மது அருந்தினார். அப்போது மனைவிக்கு தொல்லை கொடுத்தது குறித்து கேட்டதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அது கைகலப்பாக மாறியது.
இதில் ஆத்திரமடைந்த சந்திரன் மற்றும் அவரது மனைவி காளீஸ்வரி இருவரும் சேர்ந்து மண்வெட்டி, கம்பு ஆகியவற்றால் கருப்புசாமியை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், கொலை செய்ததை மறைக்க தம்பதியினர் நள்ளிரவில் தென்னந்தோப்பிலேயே குழி தோண்டி உடலை புதைத்தனர்.
மூன்று நாட்களுக்குப் பிறகு அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியதால், சந்தேகம் அடைந்த பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் அளித்தனர். அவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, புதைக்கப்பட்ட இடத்தில் மனித கைவிரல்கள் வெளியில் தெரிந்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதற்கிடையில் சந்திரன் – காளீஸ்வரி தம்பதியினர் தப்பிச் சென்றனர்.
சம்பவ இடத்திற்கு வந்த ஆனைமலை துணை காவல் கண்காணிப்பாளர் பவித்ரா தலைமையிலான போலீசார் உடலை தோண்டி எடுத்தனர். உடல் அழுகிய நிலையில் இருந்ததால், மருத்துவர்களை வரவழைத்து அங்கேயே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி, தலைமறைவாக இருந்த தம்பதியை கைது செய்தனர். விசாரணையில், மனைவியிடம் தவறாக நடக்க முயன்றதால் கருப்புசாமியை கொலை செய்ததாக சந்திரன் ஒப்புக்கொண்டுள்ளார்.
கோவை அருகே நண்பனை கொன்று உடலை தென்னந்தோப்பில் புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



