முறைகேடுகள் குறித்து 360 டிகிரியில் ஆய்வு- கோவையில் அமைச்சர் ரமேஷ் தெரிவிப்பு…

கோவை: கடந்த காலங்களில் கோவில்களில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் நேற்ற இரவு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கோயில்களில் ஏழை எளிய மக்களுக்கான திட்டங்கள் குறைவாக இருப்பதாகவும், வணிக ரீதியான செயல்பாடுகள் அதிகமாகவும் இருப்பதாகவும் கூறினார்.‌ இதனை மாற்றி, மக்கள் மன அமைதியுடன் சாமி தரிசனம் செய்வதற்கான பல்வேறு முன்னெடுப்புகளை அரசு மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், அந்தந்த கோயில்களின் கொள்ளளவிற்கு ஏற்ப குறிப்பிட்ட நேரத்திற்கு இத்தனை பேர்தான் தரிசனம் செய்ய முடியும் என்ற அடிப்படையில் ஆன்லைன் டோக்கன் வழங்கும் முறை மேம்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

60 வயதைக் கடந்த முதியவர்கள், கர்ப்பிணிகள், ஆறு மாத கைக்குழந்தையுடன் வருவோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தரிசனத்தில் முன்னுரிமை, சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என்று கூறினார். இணையதளம் பயன்படுத்தத் தெரியாத ஏழை எளிய மக்களுக்காக கோயில்களிலேயே நேரடியாக டோக்கன் பெறும் வசதியுன் ஏற்படுத்தப்படும் என்றார்.

Advertisement

திருத்தணி, திருவண்ணாமலை, திருச்செந்தூர் பழனி போன்ற கோயில்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், கூட்ட மேலாண்மைத் திட்டம் முதலில் சோதனை முறை அமல்படுத்தப்பட்டு, பின்னர் படிப்படியாக தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றார். இலவச மற்றும் கட்டண தரிசன வரிசைகளில் இடைத்தரகர்கள் மூலம் சட்டவிரோதமாகப் பணம் பெற்றுக்கொண்டு பக்தர்களை உள்ளே அனுமதிக்கும் முறைகேடுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கடந்த ஆட்சியில் அறநிலையத்துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள், வணிக ரீதியான கட்டுமானங்கள், அன்னதானத் திட்டம், உண்டியல் காணிக்கை மற்றும் கோயில் தங்கங்களை உருக்கி வைப்பு நிதியில் செலுத்தியது உள்ளிட்ட அனைத்து விவகாரங்கள் குறித்தும் 360 டிகிரி கோணத்தில் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதில் தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்த கேள்விக்கு, அது தொடர்பான நிலைப்பாட்டினை முதலமைச்சர் கட்சியின் சார்பில் முறைப்படி அறிவிப்பார் என்றார். மேலும், நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாமினை மீண்டும் நடத்துவதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகமானது தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் கொள்கைகளை முன்னிறுத்தி தூய்மையான நிர்வாகத்தை வழங்கி வருவதாகவும், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் மக்கள் பணியில் தொடர்ந்து அரசு இயங்கும் என்றும் தெரிவித்தார். திருச்செந்தூரைப் போலவே அனைத்து கோயில்களிலும் திடீர் ஆய்வுகள் நடைபெறும் என்றும் கூறினார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கூடலூர் நகராட்சியில் எம்.எல்.ஏ சுனில் ஆனந்த் கள ஆய்வு…

கோவை: கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் எம்எல்ஏ சுனில் ஆனந்த் ஆய்வு மேற்கொண்டு பழுதடைந்த குடிநீர் தொட்டியினை சரிசெய்ய உத்தரவிட்டார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூடலூர் நகராட்சி பகுதிகளில்...

Video

எம்.எல்.ஏ கேட்டவுடன் ஓடிவந்து திருக்குறள் ஒப்புவித்த அரசு பள்ளி மாணவன்…

கோவை சூலூர் அரசுப் பள்ளியில் எம்.எல்.ஏ கேட்ட கேள்விக்கு மாணவன் உடனடியாக திருக்குறள் ஒப்புவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பள்ளி வரவேற்பு நிகழ்வில் எம்.எல்.ஏ என்.எம். சுகுமார் கலந்து கொண்டார்.