கோவை: 613 பேர் தணிக்கை செய்யப்பட்டு
கோவையில் 69 ரவுடிகள் அதிரடி கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாநகரக் போலீஸ் கமிஷனர் கண்ணன், அறிவுறுத்தலின்படி கோவை மாநகரில் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணவும், ரவுடிகள், போதைப்பொருள் விற்பனையாளர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராகவும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் சட்டபூர்வநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக கடந்த 20 மற்றும் 21ம் தேதி ஆகிய இரண்டு தினங்களில் கோவை மாநகரில் பல்வேறு காவல் நிலையங்களில் உள்ள சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் 150 பேர் தணிக்கை செய்யப்பட்டு அவர்களில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 15 ரவுடிகள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், சரித்திரப்பதிவேடு இல்லாத கெட்ட நடத்தையாளர்கள் 10 நபர்களின் நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட்டு அவர்களில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் 6 பேரிடம் குற்றச்செயலில் ஈடுபடமாட்டேன் என நன்னடத்தை பிணைப்பத்திரம் பெறப்பட்டுள்ளது.
இதுபோக, சரித்திரப்பதிவேடு உள்ள ஒரு ரவுடிமீது பிரிவு 51(ஏ) சென்னை நகரக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கோவை மாநகர எல்லையை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் கீழ் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் தொடர்பாக கடந்த இரு தினங்களில் பதிவு செய்யப்பட்ட 12 வழக்குகளில் 15 எதிரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேற்படி வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2 கிலோ 265 கிராம் கஞ்சா மற்றும் 160 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நோக்கில், கோவை மாநகரில் 15 இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
கோவை மாநகர காவல்துறையானது தொடர்ந்து ரவுடிகள், சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள், போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது. அதேபோன்று சட்டவிரோத மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் அடையாளம் காணப்பட்ட 463 ரவுடிகளை கண்காணிக்கும் பொருட்டு, உயரதிகாரிகளின் உத்தரவின்பேரில், சம்பந்தப்பட்ட உட்கோட்ட டிஎஸ்பி.,தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன.
நேற்று முன்தினம் மற்றும் நேற்று சிறப்பு குழுக்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் சுமார் 51 ரவுடிகள் கண்டறியப்பட்டு, சரிபார்க்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். விசாரணையில், 48 வரலாற்றுப் பதிவேடு குற்றவாளிகளும், 3 வரலாற்றுப் பதிவேடு அல்லாத குற்றவாளிகளும் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டு, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், இந்த சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கையின் போது, எதிர்காலத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ரவுடிகளுக்கு கடுமையான எச்சரிக்கை வழங்கப்பட்டது.



