கோவை: கோவையில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் விஜய் காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விமானநிலையத்தின் பின்புறம் நண்பருடன் காரில் நின்று பேசிக்கொண்டிருந்த மாணவி கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனங்களை முன் வைத்து வருகின்றனர்.
இதனிடையே தவெக தலைவர் விஜய் காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கோவையில் தனியார் கல்லூரி மாணவி ஒருவர், பாலியல் சீண்டலுக்கும் துன்புறுத்தலுக்கும் வன்கொடுமைக்கும் ஆளாகி உள்ளதைக் கண்டு நெஞ்சம் பதறுகிறது.
அண்ணா பல்கலை மாணவிக்கு நேர்ந்த கொடுமையே இன்னும் ஆறவில்லை. அதற்குள் கோவையில் தாங்க முடியாத கூட்டுப் பாலியல் கொடுமையா?
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எங்கே? பெண்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு எங்கே? தொடர்ந்து துன்பம் நேர்கிறது. தமிழக முதல்வர் துயில் களைவது எப்போது?
கோவை மாணவிக்குக் கொடுமை விளைவித்த குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்துச் சட்டப்படி தண்டிக்க வேண்டும்.
இவ்வாறு விஜய் பதிவிட்டுள்ளார்.


                                    
