கோவை: பெரியார் விருதுக்கு விண்ணபிக்க கடைசி நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூகநீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக “சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது” 1995 ஆம்ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு 5 லட்சம் ரூபாய் விருது தொகையும், ஒருசவரன் தங்கப் பதக்கமும் தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளர் முதலமைச்சரால் தேர்வு செய்யப்படுவார்.
அதன்படி 2025 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே சமூகநீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பி வைக்கலாம்.
விண்ணப்பம், சுயவிவரம், முழுமுகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூகநீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
2025 ஆம் ஆண்டிற்கான சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியருக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 18.12.2025 என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.



