கோவை: கோவையில் நடந்த கோர விபத்தில் கணவன் கண்முன்னே மனைவி தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் நெஞ்சை பதை பதைக்க வைத்துள்ளது.
மரக்கடை பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரபீக். இவர் தனது மனைவி ராபியத்துல் பஷிரியாவுடன் நேற்று மாலை கோவை பாலக்காடு சாலை சுண்ணாம்புகாளவாய் வழியாக குனியமுத்தூரை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அந்த வழியாக பயணிகளை ஏற்றிக் கொண்டு மதுக்கரை நோக்கி கோகுலம் என்ற தனியார் பேருந்து ஒன்று அதி வேகமாகச் சென்று கொண்டிருந்தது.
அப்போது அந்த பேருந்து, இருசக்கர வாகனத்தின் பக்கவாட்டுப் பகுதியில் உரசியது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தின் பின்புறம் அமர்ந்திருந்த ராபியத்துள் பஷிரியாவின் தலையில் அந்த பேருந்து ஏறி இங்கியது. இதில் இருசக்கர வாகனத்தை ஒட்டிவந்த கணவர் முகமது ரபீக் கண்முன்னே மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த முகமது ரபீக் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
கோவையில் அதிவேகமாக இயங்கும் தனியார் பேருந்துகளால் இதுபோன்ற விபத்துக்கள் அதிக அளவில் அரங்கேரி வருகிறது. இந்த நிலையில் இந்த கோர விபத்தின் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதரவைக்கின்றது.
மேலும் இந்த விபத்து தொடர்பாக வாகனத்தை ஓட்டி வந்த கந்தேகவுண்டன் சாவடி பகுதியை சேர்ந்த தனியர் பேருந்தின் ஓட்டுனர் ஜெயக்குமார் மீது வெரைட்டிஹால் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

