கோவை: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தி.மு.க மகளிர் மாநாடில் பங்கேற்க கோவை வருகை தந்தார் முதல்வர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த காரணம்பேட்டையில் “வெல்லும் தமிழ் பெண்கள்” என்ற பெயரில் தி.மு.க மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு இன்று நடக்கிறது. அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
திமுக மகளிரணி செயலாளரும், எம்.பியுமான கனிமொழி தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட மகளிர் அணியினர் மற்றும் பெண்களை கலந்து கொள்ள தி.மு.க வினர் ஏற்பாடு செய்து உள்ளனர்.
பிற்பகல் 2 மணி முதல் வாகனங்கள் பார்க்கிங் செய்யவும், மாநாடு பந்தலுக்கு செல்லும் தொண்டர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளின் சிறப்புரையை தொடர்ந்து மாலை 4 மணிக்கு எம்.பி கனிமொழி மாநாட்டில் பங்கேற்கிறார். மாநாடு ஒருங்கிணைப்பு பணியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஈடுபட்டு உள்ளார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் கோவை வருகிறார். ஹோட்டலில் ஓய்வு எடுத்துவிட்டு பிற்பகல் காரில் பல்லடம் செல்கிறார். இரவு 8.30 மணிக்கு மீண்டும் கோவையில் இருந்து விமானத்தில் சென்னை புறப்படுகிறார்.
முதல்வர், துணை முதல்வர் வருகைய ஒட்டி மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின்படி ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதல்வர் கோவை வந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சரும், மண்டல பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி, அமைச்சர்கள் வெள்ளக்கோவில் சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன், மாவட்ட செயலாளர்கள் துரை.செந்தமிழ்ச் செல்வன், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், மேயர் ரங்கநாயகி, முன்னாள் அமைச்சர் மு.கண்ணப்பன், முன்னாள் எம்எல்ஏக்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

