கோவை: போலி பல்பு விற்ற கோவை தனுக்கோடி ஆதித்யா ஆட்டோ ஸ்டோர்ஸ் நிறுவனத்திற்கு அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நாமக்கல்லைச் சேர்ந்த பிரபு என்பவர், தனது “டொயோட்டா கொரோல்லா ஆல்டிஸ்” காருக்காக, காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் உள்ள சீனிவாசன் பொன்னுசாமி, பிரமிளா ஆகியோருக்கு சொந்தமான தனுக்கோடி ஆதித்யா ஆட்டோ ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டு பிலிப்ஸ் பல்புகளை வாங்கியுள்ளார். அந்த பல்புகள், அடுத்த சில மாதங்களிலேயே பழுதாகியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், பிலிப்ஸ் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்பினார். புகாரை விசாரித்த நிறுவனம், அவருக்கு இரண்டு பல்புகளை இலவசமாக வழங்கியது.
அப்போது தான் முதலில் வாங்கிய பல்புகள் அசல் அல்ல, அவை போலியானவை என்பது பிரபுவுக்குத் தெரியவந்தது.
இதுகுறித்து கடையிடம் விளக்கம் கேட்டபோது, அவர்கள் முறையாகப் பதிலளிக்கவில்லை. மாறாக, “பரிகாரம் கிடைத்து விட்டது, இதற்கு மேல் நீதிமன்றம் போனால் சரியிருக்காது” என மிரட்டும் தோணியில் பதில் வந்து உள்ளது.
இதனால் ஆவேசமடைந்த பிரபு, நீதிமன்றம் செல்ல முடிவு செய்தார். போலி பல்புகளின் அட்டைப்பெட்டி, அதில் இருந்த பார்கோடு, வரி ரசீதில் இருந்த குளறுபடிகள் என அனைத்து ஆதாரங்களையும் திரட்டி, வழக்கறிஞர் உதவியின்றி நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் தானே வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயம், வாடிக்கையாளரைத் திட்டமிட்டு ஏமாற்றியது உறுதியானதால், தனுக்கோடி ஆதித்யா ஆட்டோ ஸ்டோர்ஸ் நிறுவனத்திற்கு அபராதம் விதித்தார்.
அதில் பல்புகளின் விலை ரூ.8,850, இழப்பீட்டுத் தொகை ரூ.25,000, மன உளைச்சலுக்கான இழப்பீடு ரூ. 5,000 மற்றும் வழக்குச் செலவு ரூ.2,000 என மொத்தம் ரூ.40,850 ரூபாய் தொகையை 60 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
பெரிய கடைகளுக்குச் சென்றால் தரமான பொருட்கள் கிடைக்கும் என்று நம்பிச்சென்ற வாடிக்கையாளரை ஏமாற்றுவது மிகப்பெரிய துரோகம் என்பதை உணர்த்தும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளதாக பிரபு தெரிவித்துள்ளார்.

