கோவை: குரூப் 2 தேர்வு பாதியில் ரத்தானதால் கோவையில் மன வருத்தத்துடன் தேர்வர்கள் வெளியேறினர்.
இன்று தமிழகம் முழுவதும் குரூப்2, 2A தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு தமிழகத்தில் பல்வேறு தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. காலை மற்றும் மதியம் என்று இரண்டு பிரிவுகளாக தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, கோவையில் டவுன்ஹால் பகுதியில் உள்ள மைக்கேல் பள்ளி தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டு இன்று காலை தேர்வுகள் தொடங்கின. கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்டோர் தேர்வை எழுதி வந்தனர்.
இந்த நிலையில், சென்னையில் சில தேர்வு மையங்களில் நடைபெற்ற கோளாறுகள் காரணமாக தேர்வர்கள் குழப்பமடைந்து சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதனால், தமிழகம் முழுவதும் இன்று தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, வேறு தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில், கோவையில் தேர்வு ரத்து என்பதற்கான சுற்றறிக்கை கிடைப்பதற்கு தாமதம் ஆனது. இதனால் சுமார் 20 நிமிடங்கள் வரை தேர்வு தொடர்ந்தது. பின்னர் சுற்றறிக்கை வந்தவுடன் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால் தேர்வர்கள் பாதியிலே தேர்வை நிறுத்திவிட்டு வெளியேறினர். மேலும் சென்னையில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டதால் கோவையில் இந்த மையத்தில் முன்கூட்டியே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இதுகுறித்து தேர்வர்கள் கூறுகையில்,
“இந்த தேர்விற்காக பல மாதங்கள் படித்து தயாராகி தேர்வை எழுதி வந்த நிலையில் திடீரென தேர்வு ரத்து என்று கூறியது அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இனி அடுத்த தேர்வு நாள் எப்பொழுது என்று எதிர்நோக்கி மீண்டும் அதற்கு தயாராக வேண்டும். இதனால் நாட்களும் வீணாகும். இந்த தேர்வு கடினமாக இல்லாமல் சுலபமாகத் தான் இருந்தது. அடுத்து வரக்கூடிய தேர்வு எவ்வாறு இருக்கும் என்று தெரியவில்லை” என்றனர்.
இதுகுறித்து பேட்டியளித்த பார்வை மாற்றுத்திறனாளி பிரித்விராஜ் (தபால் நிலையத்தில் பணியாற்றுகிறார்), “தேர்வு ரத்து செய்யப்பட்டது மிகுந்த கவலை அளிக்கிறது. நான் 15 கிலோமீட்டர் தொலைவில் இருந்து இந்த மையத்திற்கு வந்தேன். இதற்காகவே பல நாட்கள் படித்து தயாரான நிலையில் தற்போது இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு வேறு தேதியில் தேர்வு நடைபெறும் என்றனர். அதற்கும் நான் தயாராக வேண்டும். இது எனக்கு மிகுந்த மன வருத்தம் அளிக்கிறது.” என்றார்.


இந்த கேடுகெட்ட விடியா மூஞ்சி அரசு, ஒரு அரசு தேர்வு கூட நடத்த முடியவில்லை…தமிழகம் உருப்பட வேண்டுமானால் திமுகவை தூக்கி எறிய வேண்டும்