கோவை: கோவையில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு பரிமாறிய மாவட்ட ஆட்சியர் அவர்களுடனே அமர்ந்து உணவருந்தினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்டம், பொலிவாக்கம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தினை காணொளி காட்சி (offline) வாயிலாக தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட காளப்பட்டி சாலை, சுகுணா கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தூய்மைப்பணியாளர்களுக்கு உணவுகளை வழங்கி, தூய்மைப்பணியாளர்களுடன் உணவு அருந்தினார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்றைய தினம் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தினை முதல்வர் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம் கோயம்புத்தூர் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 5 மண்டலங்களுக்குட்பட்ட 100 வார்டுகளில் பணிபுரியும் நிரந்தர தூய்மைப் பணியாளர்கள், ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் கொசு ஒழிப்பு பணியாளர்கள், மழைநீர் வடிகால் சுத்தம் செய்யும் பணியாளர்கள், பள்ளிகள் மற்றும் வார்டுகளில் கழிவறை பராமரிக்கும் பணியாளர்கள் உட்பட மொத்தம் 9454 பணியாளர்கள் பயன்பெறுவார்கள்.
மேலும், கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டு பகுதிகளிலும் தூய்மைப்பணியாளர்களுக்கான உணவு வழங்கம் திட்டத்தின் கீழ் அந்தந்த வார்டு மாமன்ற உறுப்பினர்கள் தூய்மைப்பணியாளர்களுக்கு உணவுகளை வழங்கினர்.

