கோவை: மாநகரின் மூன்று பகுதிகளில் நேற்று கஞ்சா, போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆர்.எஸ்.புரம் போலீசார் நேற்று ரோந்து பணி சென்றனர். அப்போது ஆர்.எஸ்.புரம் லைட் ஹவுஸ் ரோட்டில் நின்றிருந்த ஒரு வாலிபரை சந்தேகத்தில் பிடித்து விசாரித்தனர்.
அதில், அவர் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் போதை மாத்திரை விற்ற ஆர்.எஸ்.புரம் சுந்தரம் வீதியை சேர்ந்த சத்ய மூர்த்தி(21) என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா மற்றும் 34 போதை மாத்திரை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைதான அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதேபோல், நேற்று ரேஸ்கோர்ஸ் போலீசார் ரோந்து சென்றபோது, அம்மன்குளம் செல்வ விநாயகர் கோயில் அருகே கஞ்சா விற்று கொண்டிருந்த நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த கிரண்(22), உமேஷ் ராஜா(23) ஆகிய இருவரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 570 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை சுந்தராபுரம் போலீசார் நேற்று, பொள்ளாச்சி ரோடு குறிச்சி குளம் அருகே கஞ்சா விற்ற போத்தனூர் வசந்தம் நகரை சேர்ந்த நவுபுல்(26) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

